ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சாம் கரன் வழிநடத்தியதற்கானக் காரணத்தை அந்த அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிகர் தவன் காயம் காரணமாக விலகியதால் பஞ்சாப் அணியை சாம் கரன் வழிநடத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.
முன்னதாக ஐபிஎல் போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் பஞ்சாப் அணி சார்பாக ஜிதேஷ் சர்மா பங்கேற்றார். இதனால் பஞ்சாப் அணியின் துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா என அனைவரும் நினைத்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் தவன் பங்கேற்காத நிலையில் ஜிதேஷ் சர்மா கேப்டன் செய்யாதது ஏன்? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
இது குறித்த விளக்கத்தை பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“ஜிதேஷ், அறிவிக்கப்பட்ட துணை கேப்டன் இல்லை. அறிமுக நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதால் இந்த எண்ணம் இருந்திருக்கலாம். சாம் கரண் பிரிட்டனில் இருந்து வர தாமதமானதால், அறிமுக நிகழ்ச்சிக்கு அவரை அனுப்ப முடியவில்லை. எனவே ஜிதேஷை அனுப்பினோம். ஆனால், அவர் துணை கேப்டனாக இருப்பார் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எனவே, சாம் கரன் தான் அணியை வழிநடத்த வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்” என்றார்.