சிஎஸ்கே தேர்வு செய்த பிரேவிஸ்: யார் இந்த குட்டி ஏபிடி?

பேட்டை கையில் எடுக்கும்போதே, பயம் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு தான் களமிறங்கியிருக்கிறார் பிரேவிஸ்.
சிஎஸ்கே தேர்வு செய்த பிரேவிஸ்: யார் இந்த குட்டி ஏபிடி?
படம்: https://x.com/ChennaiIPL
2 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் 21 வயது அதிரடி பேட்டர் டியவால்ட் பிரேவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதற்கு அப்படியே ஏபி டி வில்லியர்ஸ் பேட் செய்வதைப் போலவே இருக்கும். அதனாலேயே பேபி ஏபி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் டியவால்ட் பிரேவிஸ்.

ஒரு முறை பிரேவிஸின் பள்ளிக்கு அவருடைய ஆதர்ச நாயகன் ஏபி டி வில்லியர்ஸ் சென்றுள்ளார். அடித்துப் பிடித்து அவரைச் சந்தித்து, அவருடைய அலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார் பிரேவிஸ். அதில் தொடங்கியது ஏபிடி மற்றும் குட்டி ஏபிடி உறவு. இதன் பிறகு பலமுறை அவரிடம் பேசி அறிவுரைகளைப் பெற்றிருக்கிறார்.

இன்ஸ்டகிராம் உள்பட பல்வேறு தளங்களில் ஏபி டி வில்லியர்ஸின் பேட்டிங் காணொளிகளைப் பார்த்து, அவர் பந்தை எப்படி எதிர்கொள்கிறார், எப்படி பந்தை அடிக்கிறார் என மிக நுட்பமாகக் கவனித்து பாடம் கற்றுள்ளார். டி வில்லியர்ஸை ஆதர்சமாகக் கொண்டதாலோ என்னவோ, இவருக்கு அதிரடியாக விளையாட வேண்டும், பெரிய சிக்ஸர்களை நொறுக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்துள்ளது. பேட்டை கையில் எடுக்கும்போதே, பயம் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு தான் களமிறங்கியிருக்கிறார் பிரேவிஸ்.

2022-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 6 ஆட்டங்களில் 84.33 சராசரியில் 506 ரன்கள் குவித்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஓர் உலகக் கோப்பையில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற ஷிகர் தவன் சாதனையை முறியடித்தார். 2004-ல் ஷிகர் தவன் 84.16 சராசரியில் 505 ரன்கள் எடுத்ததே அதுவரை சாதனையாக இருந்தது.

இது மட்டுமில்லாமல், யு - 19 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் 18 சிக்ஸர்களுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இதேபோல யு - 19 உலகக் கோப்பையில் 5 அரை சதங்கள் எடுத்து, ஓர் உலகக் கோப்பையில் எடுக்கப்பட்ட அதிக அரை சதங்கள் என்ற சாதனையையும் சமன் செய்தார்.

இந்தச் சாதனைகளின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த பிரேவிஸ் டி20யிலும் கலக்கத் தொடங்கினார். ஆடவர் டி20யில் சதமடித்த இளம் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் போட்டியில் படைத்தார். 57 பந்துகளில் 162 ரன்கள் விளாசி கிரிக்கெட் உலகை அதிரச் செய்தார். ஏபி டி வில்லியர்ஸே இவருடைய ஆட்டத்தை மெச்சிப் புகழ்ந்தார்.

இதனால் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார் பிரேவிஸ்.

ஐபிஎல் 2022 மற்றும் ஐபிஎல் 2024-ல் விளையாடிய பிரேவிஸ் மொத்தம் 10 ஆட்டங்களில் 230 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்துக்குப் பதிவு செய்திருந்தார். ஆனால், இவரை யாரும் தேர்வு செய்பவில்லை. இந்நிலையில்தான் மாற்று வீரராக சிஎஸ்கேவில் ரூ. 2.2 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்விகளுக்குப் பெரிய காரணம், பேட்டிங். நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தவே மூன்றாவது வரிசையில் களமிறங்கி வந்ததாக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்து வந்தார். அவர் காயம் காரணமாக விலகியதாலும் நடுவரிசை பேட்டர்கள் சொதப்பி வருவதாலும் அதைப் பலப்படுத்த பிரேவிஸை தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே.

தற்போது அற்புதமான ஃபார்மிலும் உள்ளார் பிரேஷஸ். கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த எஸ்ஏ20 போட்டியில் கோப்பையை வென்ற எம்ஐ கேப்டவுன் அணிக்காக 10 இன்னிங்ஸில் 184.17 ஸ்டிரைக் ரேட்டில் 291 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி பேட்டர் மட்டுமல்லாமல் எல்லைக் கோடுகளின் முன்னும் பின்னும் பாய்ந்து பல அற்புதமான கேட்சுகளைப் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்காக இரு டி20களில் மட்டுமே விளையாடியிருந்தாலும் எஸ்ஏ20, மேஜர் லீக் கிரிக்கெட், சிபிஎல் என உலகம் முழுக்க டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

டாடீஸ் ஆர்மி என அறியப்பட்டாலும் ரச்சின் ரவீந்திரா, பதிரனா, நூர் அஹமது, பிரேவிஸ், ஷேக் ரசீத், ஆயுஷ் மாத்ரே, ஆண்ட்ரே சித்தார்த் என சிஎஸ்கே அணியில் பல இளம் வீரர்கள் சமீபத்தில் இணைந்து அணிக்கு வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in