
தமிழக வீரர் நடராஜனை தில்லி கேபிடல்ஸில் எந்த இடத்தில் விளையாட வைப்பது என அந்த அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சென் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 10.75 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார் தமிழக வீரர் நடராஜன். ஆனால், ஐபிஎல் 2025-ல் தில்லி கேபிடல்ஸ் இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில்கூட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த ஜூலை - ஆகஸ்டில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக எந்தவொரு போட்டியிலும் நடராஜன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் 2025 போட்டியில் அவர் இதுவரை விளையாடாமல் இருந்ததற்கு உடற்தகுதி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் நடராஜன் பற்றிய கேள்விக்கு தில்லி கேபிடல்ஸ் ஆலோசகர் பீட்டர்சென் அளித்த பதில் வேறொரு காரணத்தை முன்வைத்துள்ளது.
ஆர்சிபியுடனான தோல்விக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடராஜன் இதுவரை விளையாடாதது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கெவின் பீட்டர்சென் கூறியதாவது:
"இம்பாக்ட் வீரர் உள்பட அணியில் 12 வீரர்களைக் கொண்டே விளையாட முடியும். நடராஜனை எந்த இடத்தில் விளையாட வைக்க முடியும் என நீங்கள் கூறினால் எங்களுக்கு அது உதவும்.
நடராஜனைப் பற்றி ஒன்றைக் கூற வேண்டுமானால், எல்லா வீரர்களைப்போல அணி நிர்வாகம் எதிர்பார்க்கும் அனைத்தையும் அவர் செய்கிறார். தில்லி அணியின் கட்டமைப்பைப் பார்க்கும்போது, விளையாடாத வீரர்கள் அனைவரும் தனக்காக வாய்ப்பு மிக அருகில் இருப்பதை உணர்ந்து எந்நேரமும் விளையாடத் தயாராக இருக்கிறார்கள். நடராஜனும் களமிறங்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்.
வீரர்களின் சம்பளம் பற்றி பேச நான் விரும்பவில்லை. இதுமாதிரியான போட்டிகளில் பணத்தைப் பற்றிய உரையாடல் தேவையில்லாதது. வீரர்கள் அணியில் எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம்" என்றார் கெவின் பீட்டர்சென்.
ஐபிஎல் 2024-ல் சன்ரைசர்ஸுக்காக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஹர்ஷல் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் நடராஜன். ஆனால் தில்லி அணியில் நடராஜனுக்குப் பதில் முகேஷ் குமாருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிப்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி, தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தும் நடராஜனுக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.