சிஎஸ்கே என்ன மனநிலையில் இருக்கிறது?: வெளிப்படையாகப் பேசிய மைக் ஹஸ்ஸி

"உண்மையான ரசிகர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான தருணம் தான் இது."
சிஎஸ்கே என்ன மனநிலையில் இருக்கிறது?: வெளிப்படையாகப் பேசிய மைக் ஹஸ்ஸி
படம்: https://x.com/ChennaiIPL
2 min read

ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற 4-வது இடத்தைப் பிடித்தாலே போதுமானது என்பதால், வெற்றிக்கான எண்ணத்தை இன்னும் நாங்கள் கைவிடவில்லை என சிஎஸ்கே உதவிப் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாகத் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சிஎஸ்கே தோற்றுள்ளது.

கொல்கத்தாவுடனான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கேவின் எண்ணவோட்டம், ரசிகர்கள், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சிஎஸ்கே உதவிப் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

"இந்தத் தோல்வி மிகுந்த வேதனையளிக்கிறது. வீரர்கள் வேதனையில் உள்ளார்கள். சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேதனையில் இருக்கிறார்கள். ரசிகர்களும் இந்தத் தோல்வியால் மிகுந்த வேதனையில் இருப்பார்கள். ஆனால், உண்மையான ரசிகர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான தருணம் தான் இது.

நாங்கள் இன்னும் வெற்றிக்கான எண்ணத்தைக் கைவிடவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தாலே போதுமானது. ஐபிஎல் போன்ற பெரிய போட்டியில் ஓரிரு வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பெறுவதான் விஷயமே. சிஎஸ்கே வசம் தற்போது அது இல்லாமல் இருக்கலாம். நாங்கள் தொடர்ச்சியாக நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். இது தான் நிதர்சனம் என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால், நிலைமை உடனடியாக மாறாது என்று எதுவும் இல்லை.

ஸ்டீபன் ஃபிளெமிங் தலைசிறந்த பயிற்சியாளர். பல காலமாக சிறந்த கேப்டனாக இருக்கிறார் எம்எஸ் தோனி. ருதுராஜ் கெயிக்வாட் அணியுடன்தான் இருக்கப் போகிறார். அணியில் ஓர் இணக்கத்தையும் நெருக்கத்தையும் உண்டாக்க அவர்கள் நிச்சயமாக முயற்சிப்பார்கள். அணியில் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதை அவர்கள் உறுதிபடுத்துவார்கள்.

வெளியிலிருந்து நிறைய விமர்சனங்கள் வரும். நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் தான். இந்தப் போட்டியில் இதுவரை நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால், அணியினுள் மனதளவில் ஓர் அணியாக ஒருவருக்கொருவர் மிகவும் இணக்கமாக இருக்கவே முயற்சிப்போம்.

முதல் நாளிலிருந்தே சிஎஸ்கேவுக்கான ரசிகர்கள் அற்புதமான ஆதரவை அளித்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஆதரவை அளிப்பார்கள் என நம்புவோம். அவர்கள் வேதனையில் இருப்பார்கள் எனத் தெரியும். ஓய்வறையில் இருப்பவர்களுக்காக எந்தளவுக்கு நிலையை மாற்ற வேண்டும் என விரும்புகிறோமோ அதைவிட ரசிகர்களுக்காக இந்த நிலையை மாற்ற விரும்புகிறோம். பல நல்ல நேரங்களில் அவர்கள் எங்களுடன் பின்னிப் பிணைந்து இருந்திருக்கிறார்கள். இந்தத் தருணத்திலும் அதே உணர்வுடன் ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

சிஎஸ்கேவில் இருக்கும் வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டு அஸ்தமனத்தில் உள்ளவர்கள் என்று கூறுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கடந்த காலங்களில் அஸ்தமன காலத்தில் நிறைய வீரர்கள் சிஎஸ்கேவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். ஷேன் வாட்சன், அஜிங்க்யா ரஹானே.. இவர்கள் சிஎஸ்கேவுக்காக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். எனவே, எங்களிடம் உள்ள வீரர்களிடத்தில் வெளிப்படுத்துவதற்கு இன்னும் சில நல்ல கிரிக்கெட் உள்ளது. எனவே, அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர்களிடத்திலிருந்து சிறந்த கிரிக்கெட்டை எதிர்பார்க்கலாம்.

சிஎஸ்கேவில் உள்ள இளம் ரத்தங்களைப் பொறுத்தவரை, அவர்கள் திறமையை வெளிப்படுத்த தயாரானவுடன் அவர்களைத் தேர்வு செய்யலாம் என்றிருக்கிறோம். சில நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்தப் போட்டியை இனி நம்மால் வெல்ல முடியாது என்ற எண்ணம் வந்தவுடன் தான் இனி இளைஞர்களைக் கொண்டு முயற்சிக்கலாம் என முடிவெடுப்பார்கள். நாங்கள் இன்னும் முயற்சித்து முடிந்தளவுக்குப் போட்டியில் வெற்றியைக் காண நினைக்கிறோம்" என்றார் மைக் ஹஸ்ஸி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in