
2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து இந்திய வீரர் விராட் கோலி முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்ற பிறகு மூத்த வீரர்கள் சிலரிடமிருந்து ஓய்வு அறிவிப்பு வெளியாகுமா என்ற பேச்சுகள் இருந்தன. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். விராட் கோலி 2027 உலகக் கோப்பை வரை விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. 2027 உலகக் கோப்பையின்போது விராட் கோலியின் வயது 38 ஆக இருக்கும்.
இந்நிலையில், 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து விராட் கோலி மௌனம் கலைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம், அடுத்த பெரிய இலக்கு என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
"அடுத்த பெரிய இலக்கு? தெரியவில்லை. அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கலாம்" என்று விராட் கோலி பதிலளித்தார். இதன்மூலம், 2027 உலகக் கோப்பையில் பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர் மனதில் இருப்பது வெளிப்பட்டுவிட்டது.
2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார்.