பாண்டியா கேப்டன் செய்த விதம் சாதாரணமாக இருந்தது என முன்னாள் கிரிக்கெட் வீரர் காவஸ்கர் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் தோனி களமிறங்கினார்.
ஹார்திக் பாண்டியா வீசிய இந்த ஓவரில், தான் விளையாடிய முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரளவைத்தார் தோனி. 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இந்த ஒரு ஓவரை குறித்து காவஸ்கர் இன்னிங்ஸின் இடைவேளையில் பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
“நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான பந்துவீச்சை நான் பார்க்கிறேன். ஒரு சிக்ஸர் என்றால் பரவாயில்லை. பேட்டர் அப்படி ஒரு பந்தை எதிர்பார்த்து நிற்கும் போது, மீண்டும் ஒரு லெந்த் பந்தை வீசினார். 3-வது பந்தை ஃபுல் டாஸாக லெக் சைடில் வீச அதுவும் சிக்ஸர். இது மிகவும் சாதாரணமான பந்துவீச்சு. பாண்டியா கேப்டன் செய்த விதமும் சாதாரணமாக இருந்தது” என்றார்.