சாம்பியன்ஸ் கோப்பையில் வருண் சக்ரவர்த்தி?: ரோஹித் பதில்

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்திANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பையில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, ஒருநாள் தொடரிலும் இடம்பெற்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறவில்லை. எனினும் பிப்ரவரி 12 வரை அணியில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி உண்டு.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில்,

`டி20 தான் என்றாலும் தன்னுடைய பந்துவீச்சில் வித்தியாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. அவருடைய திறமையை எப்படிப் பயன்படுத்தமுடியும் எனப் பார்க்கவுள்ளோம். ஒருநாள் தொடரில் அவரை விளையாடவைத்து அவருடைய திறமையை மதிப்பிடவுள்ளோம்.

சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் விளையாடுவாரா என இப்போது நினைக்கவில்லை. ஆனால் அதற்கான போட்டியில் அவர் உள்ளார். எல்லாம் நல்லமுடியாக நடந்து, எங்கள் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்தால், நிச்சயம் என்ன செய்யவேண்டும் என நாங்கள் யோசிப்போம்’ என்று கூறியுள்ளார்.

ரோஹித் சர்மாவின் பதிலை வைத்துப் பார்க்கும்போது, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சிறப்பாகப் பந்துவீசினால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

logo
Kizhakku News
kizhakkunews.in