
வங்கதேச முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
டாகா பிரிமீயர் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் முஹமேதன் ஸ்போர்டிங் கிளப் அணியை வழிநடத்துகிறார் தமிம் இக்பால். தமிம் இக்பாலின் அணி ஷைன்புகுர் கிரிக்கெட் கிளப் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் மட்டுமே தமிம் இக்பால் ஃபீல்டிங் செய்துள்ளார். மார்புப் பகுதியில் அசௌகரியத்தை உணர்ந்தவுடன் உடனடியாகக் களத்திலிருந்து வெளியேறி, மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்ற தமிம் இக்பால் வான்வழி ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானார். ஆனால், அவரால் சமாளிக்க முடியவில்லை. உடனடியாக, ஏற்கெனவே மருத்துவம் பார்த்த மருத்துவமனைக்குச் சென்றார் தமிம் இக்பால். அவருடைய இதயத்தில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
தமிம் இக்பாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"அவர் சற்று மோசமான நிலையில் திரும்ப மருத்துவமனை வந்தார். இதை மாரடைப்பு என்றே சொல்லலாம். நாங்கள் அடைப்பை அகற்றுவதற்காக ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்தோம். மருத்துவ நடைமுறைகள் சுமூகமாக நடந்து முடிந்துள்ளன" என்று மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிகேஎஸ்பி தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் மோன்டு தத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், "டாஸ் நேரத்தில் நல்ல உத்வேகத்தில் இருந்தார். உடல்நலம் குன்றியவுடன் களத்திலிருந்து வெளியேறி தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றார். அங்கிருந்த மருத்துவர்களுக்கு, தமிம் இக்பாலை அனுப்ப மனம் இல்லை. ஆனால், தமிம் இக்பால் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு அவரே வான்வழி ஆம்புலன்ஸுக்கான ஏற்பாட்டைச் செய்தார்" என்றார் அவர்.