
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்து தமிழக அணி வெளியேறியுள்ளது.
2024-25 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி கடந்த நவ.23 அன்று தொடங்கியது. இதில் 38 அணிகள் பங்கேற்கின்றன. இவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அணி இடம்பெற்றுள்ள பிரிவில் திரிபுரா, சிக்கிம், பரோடா, குஜராத், கர்நாடகம், சௌராஷ்டிரம், உத்தரகண்ட் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் திரிபுராவை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் சிக்கிம் அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் பரோடாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 19 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது.
இன்று 5-வது ஆட்டத்தில் கர்நாடகம் அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி மிகவும் மெதுவாக விளையாடி 20 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கைவிட, இறுதியில் வருண் சக்ரவர்த்தி 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணி தரப்பில் கௌஷிக் மற்றும் மனோஜ் பண்டாகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய கர்நாடகம் அணி 8.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மணிஷ் பாண்டே 29 பந்துகளில் 42 ரன்களும், மயங்க் அகர்வால் 27 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இப்போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது தமிழக அணி.
5 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்ற தமிழக அணி புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக 2021-22 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணி, அடுத்த மூன்று ஆண்டுகளிலும் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பையை அதிகமாக 3 முறை வென்ற தமிழக அணி, கடைசி 3 ஆண்டுகளிலும் லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.