மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் நாளை தனது அணியுடன் இணையவுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவுக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் குணமாக ஆறு வாரங்கள் வரை ஆகலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் அடுத்து நடைபெற்ற எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஐபிஎல்-லில் விளையாடுவதும் சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்தார்.
இந்நிலையில் அவர் மும்பை அணியுடன் நாளை இணையப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு முழுஉடற்தகுதிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
ஐசிசி சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்கு திரும்புவதால் அந்த அணிக்குத் தற்போது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தனது அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 7-ல் தில்லி அணியுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.