
6 பேர் கொண்ட குடும்பத்தினரை நாடு கடத்தும் முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த மத்திய அரசு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
அஹமது தாரிக் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காஷ்மீர்வாசிகள். இவர்களுடைய மகன் பெங்களூருவில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. அஹமது தாரிக் பட் மற்றும் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். உரிய இந்திய ஆவணங்கள் உள்ளபோதிலும், பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்காக வாகா எல்லைக்கு அழைத்துச் சென்றதாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். விசா அனுமதித்த காலத்தைக் காட்டிலும் இந்தியாவில் கூடுதலாக வசித்து வருகிறார்கள் என்பது இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகயோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. ஆவணங்களைச் சரி பார்க்கும் வரை இந்தக் குடும்பத்தினரை நாடு கடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு நிவாரணம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.