
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முந்தைய ஆட்டங்களில் லக்னௌவுக்கு அதிரடி தொடக்கத்தை அளித்து வந்த மிட்செல் மார்ஷ் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் பந்தில் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க பேட்டரான எய்டன் மார்க்ரம் இம்முறை மிரட்டலான தொடக்கத்தைத் தர முயற்சித்தார். 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த அவர், 4-வது ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் ஏமாற்றமளித்து 2 ரன்களுக்கு மேக்ஸ்வெல் சுழலில் வீழ்ந்தார். 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறியது லக்னௌ.
நிகோலஸ் பூரன் சரிவிலிருந்து மீட்க பவுண்டரிகளாக விளாசினார். 10 ஓவர்களில் 76 ரன்களுக்கு விரைந்தது லக்னௌ. 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த பூரன், யுஸ்வேந்திர சஹல் சுழலில் ஆட்டமிழந்தார்.
ஃபினிஷிங்குக்கு உதவுவார் என்று நம்பப்பட்ட டேவிட் மில்லர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்தாலும், அப்துல் சமத் முதல் பந்திலேயே இறங்கி வந்து சிக்ஸரை அடித்து கடைசி நேர சரவெடிக்குத் தயாரானார். அர்ஷ்தீப் சிங் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை அடித்து துவம்சம் செய்தார்.
தொடக்கத்தில் தடுமாறினாலும் 180 ரன்களை தொடுவதற்கான வாய்ப்பை லக்னௌவுக்கு உருவானது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். 41 ரன்கள் எடுத்த ஆயுஷ் பதோனி மற்றும் 27 ரன்கள் எடுத்த அப்துல் சமத் ஆகியோர் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்கள்.
கடைசி இரு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே லக்னௌ அணியால் எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது லக்னௌ.
172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. இம்முறை பிரியன்ஷ் ஆர்யா விரைவாக ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் பவர்பிளேயில் கலக்கினார். பவர்பிளேயில் சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தியும் லக்னௌவுக்குப் பலனளிக்கவில்லை. ரவி பிஷ்னாய் வீசிய 6-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார் பிரப்சிம்ரன் சிங். 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 62 ரன்கள் எடுத்தது.
ஷ்ரேயஸ் ஐயரும் வந்தவுடன் சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆட்டத்தின் வேகத்தை உயர்த்தினார். பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 10 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் முடிவை முதல் பாதியிலேயே உறுதி செய்தது பஞ்சாப். 60 பந்துகளில் 62 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இம்பாக்ட் வீரராக உள்ளே வந்த நேஹல் வதேரா தொடக்கத்தில் சற்று காலம் எடுத்து களத்தில் நேரத்தை செலவிட்டார். 14-வது ஓவரிலிருந்து நேரத்தை செலிவட்டதற்கான அறுவடையைத் தொடங்கினார் வதேரா. பிஷ்னாய் ஓவரில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி. ஷார்துல் தாக்குர் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி.
கடைசி 4 ஓவர்களில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அப்துல் சமத் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் வெற்றியை உறுதி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். கடந்த முறை சதத்தைத் தவறவிட்ட ஷ்ரேயஸ் ஐயர் இம்முறை கடைசி சிக்ஸர் மூலம் அரைசதத்தைக் கடந்தார்.
16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். நேஹல் வதேரா 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்ட பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்தில் உள்ளது.