நெருக்கடிகளைத் தாண்டி சாதித்துக் காட்டிய ஷ்ரேயஸ் ஐயர்!

சில மாதங்களுக்கு முன்பு வரை மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தார் ஷ்ரேயஸ் ஐயர்.
நெருக்கடிகளைத் தாண்டி சாதித்துக் காட்டிய ஷ்ரேயஸ் ஐயர்!
ANI

ஐபிஎல் கோப்பையை வென்ற 5-வது இந்திய கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். தோனி, ரோஹித் சர்மா, கெளதம் கம்பீர், பாண்டியா வரிசையில் இணைந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தார் ஷ்ரேயஸ் ஐயர். ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் வரை அவர் மீது பலருக்கும் சந்தேகம் இருந்தது. இன்று அவர் கையில் ஐபிஎல் கோப்பை.

முதுகு வலி காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இதைத் தொடர்ந்து முழு உடற்தகுதியுடன் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பையில் 66.25 சராசரியுடன் 530 ரன்களைக் குவித்து அசத்தினார். இதில் 2 சதங்கள், 3 அரை சதங்கள். ஒரு சதத்தை அரையிறுதி ஆட்டத்தில் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியில் அதிகமான ரன்களை குவித்தவர் ஷ்ரேயஸ் ஐயர் தான்.

இதன்பிறகு பெரிய சறுக்கை எதிர்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 2 டெஸ்டுகளில் விளையாடிய ஐயர் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளில் பங்கேற்று 104 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக மீதமுள்ள 3 டெஸ்டுகளிலும் அவர் விளையாடவில்லை.

உள்ளூர் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய வீரர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாட விரும்பினால், அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபிக்க வேண்டும் என கூறினார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்காதது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

காயமடைந்திருந்த ஷ்ரேயஸ் ஐயர், முழுமையாக குணமடைந்துவிட்டதாக என்சிஏ தெரிவித்த பின்பும் அவர் எந்த உள்ளூர் கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. இதனால் பிசிசிஐயின் கோபத்துக்கு ஆளானார்.

2023 - 2024 பருவத்துக்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டார்.

நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்கினார். இறுதிச் சுற்றில் 95 ரன்கள் எடுத்து மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தார். ரஞ்சி கோப்பை இறுதிச் சுற்றில் முதுகு வலியால் பாதிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் 2024 போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது. இதன் பிறகு அவர் மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்து கேகேஆர் அணியில் இணைந்தார்.

ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கும் முன்னேறியது. இப்போது ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்துள்ளார்.

விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு உழைத்துக்கொண்டே இருந்தால், உலகம் உங்கள் வசப்படும். இதை அமைதியாக நிரூபித்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in