ஐபிஎல் ஏலத்தில் தவறாகத் தேர்வான ஷஷாங், சாதித்த கதை!

“நான் பேட்டிங் செய்யும்போது நானே சிறந்தவன் என்ற மனநிலையுடன் விளையாடுவேன்”.
ஷஷாங் சிங்
ஷஷாங் சிங்ANI

நான் பேட்டிங் செய்யும்போது நானே சிறந்தவன் என்ற மனநிலையுடன் விளையாடுவேன் என ஷஷாங் சிங் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பிறகு சிறப்பாக விளையாடிய ஷஷாங் சிங் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி அணி வெற்றி பெற உதவினார்.

இந்த ஆட்டத்திற்கு பிறகு ஷஷாங் சிங் பேசியதாவது:

“இதுபோன்ற இன்னிங்ஸை நினைத்து பார்த்திருக்கிறேன், ஆனால் அது உண்மையில் நடந்த பிறகு, இன்னும் இது எப்படி நடந்தது? என சிந்திக்கிறேன். பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடினாலும், நான் பேட்டிங் செய்யும்போது நானே சிறந்தவன் என்ற மனநிலையுடன் விளையாடுவேன். எனக்கு போதுமான அனுபவம் இருந்தாலும் இதற்கு முன்னதாக எனக்கு அவ்வளவு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த அணியில் அனைவரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறாரக்ள்” என்றார்.

முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி அவரைத் தவறாகத் தேர்வு செய்தது என தகவல் வெளியானது.

ஐபிஎல் ஏலத்தின் போது ஷஷாங் சிங்கை ரு. 20 லட்சத்துக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்திருந்தது. பின்னர் பஞ்சாப் அணி தாங்கள் வேறு வீரர் என நினைத்து இவரைத் தேர்வு செய்ததாக கூறிய நிலையில், ஏலம் அடுத்த வீரரை நோக்கி நகர்ந்தது. எனவே ஷஷாங், பஞ்சாப் அணியில் அதிர்ஷ்டத்தால் தேர்வு செய்யப்பட்டார் என ரசிகர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அளித்தது பஞ்சாப் அணி.

இது குறித்து, “ஷஷாங் சிங்கை தேர்வு செய்யவேண்டும் என்ற சிந்தனை ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு இருந்தது. ஒரே மாதிரியான இரண்டு பெயர்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது” என பஞ்சாப் அணியின் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in