டி20 உ.கோ. இறுதிச் சுற்றில் ரோஹித் எடுத்த திடீர் முடிவு: மனம் திறந்த சஞ்சு சாம்சன்

உங்களைப் போன்ற ஒரு கேப்டனுக்குக் கீழ் நான் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாட முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று ரோஹித்திடம் கூறினேன்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்
1 min read

டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தான் விளையாட வேண்டியது என்றும், கடைசி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டது என்றும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 29 அன்று, பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இந்நிலையில் இந்த இறுதிச் சுற்றில் சஞ்சு சாம்சன் விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும், கடைசி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமல் குமார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சஞ்சு சாம்சன் பேசியதாவது

“இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. என்னை தயாராக இருக்கச் சொன்னார்கள். நானும் தயாராக இருந்தேன். ஆனால், டாஸ் போடுவதற்கு முன்பாக அந்த முடிவு மாற்றப்பட்டது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக என்னைத் தேர்வுச் செய்யாதது குறித்து ரோஹித் சர்மா என்னிடம் பேசினார். இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு பதிலளித்த ரோஹித், ‘நீங்கள் சந்தோஷமாக இல்லை என்பது எனக்கு தெரியும்’ என்றார். அதற்கு, ‘நீங்கள் என்னிடம் வந்து பேசியதை நான் முழுமையாக மதிக்கிறேன். உங்களைப் போன்ற ஒரு கேப்டனுக்குக் கீழ் நான் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாட முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. என் வாழ்நாள் முழுவதும் இது கவலை அளிக்கும்’ என்று ரோஹித்திடம் கூறினேன்.

அச்சமயத்தில், ரோஹித் சர்மாவின் நல்ல குணம் குறித்து நான் அறிந்தேன். உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்பாக ஒரு வீரரை தேர்வுச் செய்யவில்லை என்பதால், அவரிடம் 10 நிமிடங்கள் பேசினார்.

ஒருவேளை நான் ரோஹித் சர்மாவின் இடத்தில் இருந்திருந்தால், தேர்வுச் செய்யாத அந்த வீரரிடம் ஆட்டம் முடிந்த பிறகு பேசியிருப்பேன். ஆனால், ரோஹித் செய்த செயல் எப்போதும் என் மனதில் இருக்கும்”.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in