என் மகன் ஒன்றரை வயது குழந்தை: கொதித்தெழுந்த பும்ரா மனைவி!

"உங்களுடையக் கேளிக்கைக்கு என் மகனை இழுக்கக் கூடாது."
என் மகன் ஒன்றரை வயது குழந்தை: கொதித்தெழுந்த பும்ரா மனைவி!
படம்: https://x.com/SanjanaGanesan
2 min read

மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் இணையத்தில் தன் மகன் குறித்து வெளியாகும் கருத்துகளுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 215 ரன்கள் குவித்தது. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 161 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஜஸ்பிரித் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தை நேரில் காண ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன், மகன் அன்கடுடன் வந்திருந்தார். கிரிக்கெட் ஆட்டத்தைக் காண வந்தபோது பும்ரா - சஞ்சனாவின் குழந்தை சிரிக்காமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அவருடைய மகனுக்கு மகிழ்ச்சியில்லை, நரைன் சிரித்துகூட பார்த்திருக்கிறோம் இவர் சிரித்துப் பார்த்ததில்லை என இணையவாசிகள் கேலி செய்யத் தொடங்கினார்கள்.

இந்நிலையில், இதுமாதிரியான கேளிக்கைகள் அனைத்துக்கும் சஞ்சனா கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் சஞ்சனா கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது:

"உங்களுடையக் கேளிக்கைக்கு என் மகனை இழுக்கக் கூடாது.

இணையம் என்பது வெறுக்கத்தக்க மோசமான ஓர் இடம். எனவே தான் நானும் பும்ராவும் எங்களால் முடிந்தளவுக்கு எங்களுடைய மகனை சமூக ஊடகங்கள் பார்வைக்குக் கொண்டு வராமலே இருந்தோம். கேமிராக்களால் நிறைந்த கிரிக்கெட் மைதானத்துக்குக் குழந்தையை அழைத்து வருவதனால் ஏற்படும் விளைவுகளை நான் முற்றிலுமாகப் புரிந்துகொள்கிறேன். பும்ராவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே நானும் என் மகனும் மைதானத்துக்கு வந்தோம் என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

வெறும் 3 நிமிடக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு என் மகன் யார், அவனுடைய குணாதிசயம் என்ன, அவனுடைய பிரச்னை என்ன என்று அவசியமில்லாமல் கருத்தைத் திணித்து தேசிய அளவில் செய்தியாக்குவதிலும், இணையத்தில் வைரலுக்கான விஷயமாக என் மகன் ஆவதிலும் எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை.

அவன் வெறும் ஒன்றரை வயது குழந்தை. குழந்தையைக் குறிப்பிட்டு மனஅழுத்தம் போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவது நாம் எந்த மாதிரியான சமூகமாக மாறி வருகிறோம் என்பதையே காட்டுகிறது. உண்மையில் இது வேதனையளிக்கிறது.

எங்களுடைய மகன் குறித்தும், எங்களுடைய வாழ்க்கை குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த உண்மைக்கேற்ப இணையத்தில் கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்றைய உலகில் சிறிதளவிலான நேர்மையும், கனிவும்கூட வெகுதூரம் சென்றடைந்துவிட்டது" என்று சஞ்சனா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in