
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவர் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய சஞ்சு சாம்சன் மீண்டும் பேட் செய்ய வரவில்லை. சூப்பர் ஓவரின்போதும் களமிறங்கவில்லை.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்திலும் இவர் விளையாடாததால் ரியான் பராக் தான் அணியை வழிநடத்தினார். இவருடைய இடத்தில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கி முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அதிரவைத்தார்.
ராஜஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வரும் வியாழனன்று பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இதில் சஞ்சு சாம்சன் களமிறங்குவாரா மாட்டார் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
"சஞ்சு சாம்சன் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் மருத்துவக் குழுவினருடன் அவர் ஜெய்ப்பூரிலேயே இருக்கவுள்ளார். குணமடைந்து வருவதால், ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட அவர் பெங்களூருவுக்குப் பயணிக்கப்போவதில்லை. அணி நிர்வாகம் இவரை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவது ஒவ்வொரு ஆட்டத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சன் விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால், முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடவில்லை. ரியான் பராக் தான் அணியை வழிநடத்தினார். அவரே ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்திலும் அணியை வழிநடத்தவுள்ளார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.