வெற்றிக்கு மிக அருகில் சென்று ஆர்சிபியிடம் 2 ரன்களில் தோற்ற சிஎஸ்கே!

16 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை அடைந்தது.
ஆயுஷ் மாத்ரே
ஆயுஷ் மாத்ரேANI
2 min read

பரபரப்பான ஆட்டம் என்றால் இதுதான்.

பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது ஆர்சிபி அணி. சிஎஸ்கே, ஆர்சிபி ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாக இது அமையும்.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று கூறி ஆச்சர்யம் அளித்தார் தோனி. ஆர்சிபி அணியில் காயம் காரணமாக ஹேசில்வுட் விளையாடவில்லை. என்கிடி அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆர்சிபியின் இன்னிங்ஸை மூன்றாகப் பிரிக்கலாம். முதல் 11 ஓவர்கள். அடுத்த 7 ஓவர்கள். கடைசி 2 ஓவர்கள்.

முதல் 11 ஓவர்கள் ஆர்சிபிக்குச் சொந்தமானது. பவர்பிளேயில் ஜகோப் பெதெல்லும் கோலியும் அட்டகாசமாக விளையாடி 71 ரன்கள் எடுத்தார்கள். பெதெல் 27 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை ஜடேஜாவும் பதிரனாவும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு தவறவிட்டார்கள். இது சிஎஸ்கேவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 28 பந்துகளில் அரை சதமெடுத்தார் பெதெல். கடந்த ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய பதிரனா இன்று அவருடைய முதல் மூன்று ஓவர்களை அருமையாக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். பெதெல் 55 ரன்களில் பதிரனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலி 29 பந்துகளில் அரை சதமடித்தார். 11 ஓவர்களில் ஆர்சிபியின் ஸ்கோர் 114/1.

அடுத்த 7 ஓவர்களில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் கொண்டுவந்தார்கள். கோலி 62 ரன்களுக்கு சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் எடுத்த படிக்கல், பதிரனா பந்தில் ஆட்டமிழந்த பிறகு ஜிதேஷ் சர்மா 7 ரன்களுக்கு நூர் அஹமது பந்தில் வீழ்ந்தார். இந்த 7 ஓவர்களில் பதிரனாவும் நூர் அஹமதுவும் அற்புதமாகப் பந்துவீசினார்கள். 18 ஓவர்களில் ஆர்சிபி 159 ரன்கள் தான் எடுத்தது. 200 ரன்களை எடுக்குமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இந்த ஆட்டத்தில் முதல் 2 ஓவர்களை மோசமாக வீசியிருந்த கலீல் அஹமதுவை 19-வது ஓவரை வீச அழைத்தார் தோனி. அது மிகத் தவறான முடிவாக அமைந்தது. ரொமாரியோ ஷெபர்ட், கலீல் அஹமதுவின் பந்துவீச்சைப் பிரித்து மேய்ந்தார். 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என அந்த ஓவரில் 33 ரன்கள் எடுத்தார் ஷெபர்ட். இந்த உற்சாகத்தில் அடுத்த ஓவரிலும் விளையாடினார். மேலும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடிக்க, அந்த ஓவரில் ஆர்சிபிக்கு 21 ரன்கள் கிடைத்தன. கடைசியில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் நம்பமுடியாத அளவுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. 14 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த ரொமாரியோ ஷெபர்ட், ஐபிஎல் போட்டியில் விரைவாக அரை சதமெடுத்த 2-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வழக்கம்போல முதல் 2 ஓவர்களில் நிதானமாக விளையாடி 11 ரன்கள் எடுத்தார்கள். 2.4 ஓவர்களில் 13 ஓவர்கள் எடுத்த சிஎஸ்கே அடுத்த 8 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது. 4-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஓவரில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் ஆயுஷ் மாத்ரே. அந்த ஒரு ஓவர் சிஎஸ்கே இன்னிங்ஸை வழிநடத்தியது என்றே கூறலாம். ஷேக் ரசீத் 14 ரன்களிலும் சாம் கரண் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த மாத்ரேவும் ஜடேஜாவும் ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடன் விளையாடினார்கள். பவர்பிளேயில் 58 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, 10 ஓவர்களின் முடிவில் 106 ரன்கள் எடுத்தது. 25 பந்துகளில் அரை சதமெடுத்து, இந்த மைல்கல்லை எட்டிய இளம் சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை எட்டினார் ஆயுஷ் மாத்ரே. ஷெபர்டின் முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார் மாத்ரே. 14 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து பரபரப்பான முடிவுக்குத் தயாரானது சிஎஸ்கே.

29 ரன்களில் அரை சதமெடுத்தார் ஜடேஜா. இந்தப் பருவம் முழுக்க ஒரு பேட்டராக ஜடேஜா சாதிப்பார் என சிஎஸ்கே ரசிகர்கள் பொறுமையாகக் காத்திருந்த நிலையில் முக்கியமான ஆட்டத்தில் தனது பேட்டிங் திறமையை அவர் வெளிப்படுத்தினார். சிக்ஸர் அடித்து சதமடிக்க ஆசைப்பட்ட மாத்ரே, ஏமாற்றமடைந்தார். 94 ரன்களில் என்கிடி பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல்லின் மூலம் சிஎஸ்கேவுக்கு மிகவும் நம்பிக்கையளிக்கும் வீரராக அவர் மாறியுள்ளார். பிரேவிஸ் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அது தவறான முடிவாக இருந்தாலும் குறித்த நேரத்துக்குள் முறையீடு செய்யாததால் வாய்ப்பை இழந்தார். இதன்பிறகு தோனி களமிறங்கினார். சுயாஷ் சர்மா 18-வது ஓவரை அற்புதமாக வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 29 ரன்களும் கடைசி ஓவரில் 15 ரன்களும் அடிக்க வேண்டிய நிலைமை சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டது. யார்க்கர், லோ ஃபுல்டாஸ் என கடைசி ஓவரில் அருமையாக வீசி ஆர்சிபி அணிக்கு வெற்றியை அளித்தார் யஷ் தயால். 211 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக அருகில் சென்ற சிஎஸ்கே, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியால் 16 புள்ளிகளை அடைந்த ஆர்சிபி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை அடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in