ரோஹித் - சூர்யா அதகளம்: சிஎஸ்கே மீண்டும் தோல்வி!

மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.
ரோஹித் - சூர்யா அதகளம்: சிஎஸ்கே மீண்டும் தோல்வி!
ANI
2 min read

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிஎஸ்கேவில் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டார்.

சிஎஸ்கேவுக்கு பவர்பிளே மீண்டும் சிறப்பாக அமையவில்லை. முதல் பவுண்டரி மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் தான் வந்தது. இந்த நெருக்கடியிலேயே அஷ்வனி குமார் வந்தவுடன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் ரச்சின் ரவீந்திரா. 17 வயது ஆயுஷ் மாத்ரேவுக்கு இது அறிமுக டி20. சிஎஸ்கேவுக்காக விளையாடும் இளம் வீரர். முதல் 4 பந்துகளில் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்கள் என சிஎஸ்கே பேட்டிங்கில் காணக்கிடைக்காத அதிரடியைக் காட்டினார். இவருடைய ஆட்டத்தினால் மட்டுமே பவர்பிளேயில் சிஎஸ்கே 48 ரன்கள் எடுத்தது.

15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த மாத்ரே, தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். மாத்ரே விக்கெட்டுக்கு பிறகு ஆட்டத்தில் மீண்டும் அமைதி நிலவியது. ஷேக் ரஷீத் 19 ரன்களுக்கு சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. மாத்ரே விக்கெட்டுக்கு பிறகு முதல் பவுண்டரி அடிக்க சிஎஸ்கேவுக்கு 28 பந்துகள் தேவைப்பட்டன.

13 ஓவர்கள் முடிவில் ஜடேஜா 16 பந்துகளில் 17 ரன்களும் ஷிவம் துபே 18 பந்துகளில் 15 ரன்களும் எடுத்திருந்தார்கள். ஹார்திக் பாண்டியா ஓவரில் சிக்ஸர் அடித்த பிறகு, துபே தனது ஃபார்மை பெற்றார். ஜடேஜாவும் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். அஷ்வனி குமார் வீசிய 16-வது ஓவரில் இருவரும் இணைந்து 24 ரன்கள் எடுத்தார்கள்.

அரை சதம் அடித்த துபே 32 பந்துகளில் 50 ரன்களுக்கு பும்ராவிடம் ஆட்டமிழந்தார். தோனி வந்தவுடன் 18-வது ஓவரை சான்ட்னரிடம் ஒப்படைத்தார்கள். இதில் ஜடேஜா 4 பந்துகளை எதிர்கொண்டும் சிஎஸ்கே ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. பும்ரா அடுத்த ஓவரிலேயே தோனி விக்கெட்டையும் வீழ்த்தினார். இருந்தாலும் இந்த ஓவரில் அதிர்ஷ்டவசமாக இரு பவுண்டரிகள் கிடைத்தன. கடைசி ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 4-வது வீரராகக் களமிறக்கப்பட்ட ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை களமிறங்கியது. இம்பாக்ட் வீரராக மும்பையில் ரோஹித் சர்மாவும் சிஎஸ்கேவில் அஷ்வினும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே ரயன் ரிக்கெல்டன் இரு பவுண்டரிகள் அடித்து அடித்தளம் அமைத்தார். இந்த ஓவரில் ரெவ்யூ எடுத்திருந்தால் ரிக்கெல்டன் விக்கெட் கிடைத்திருக்கும், சிஎஸ்கே எடுக்கவில்லை.

ரோஹித் சர்மா அற்புதமாக மடக்கி அடித்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இன்றைய நாள் அவருடையது என்பது இதிலிருந்தே தெரிந்தது. பவர்பிளேயில் இரு ஓவர்களை வீசிய அஷ்வின் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தபோதிலும், மும்பை 6 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தது. ஜடேஜா வந்தவுடன் ரிக்கெல்டன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை சிஎஸ்கேவிடமிருந்து அபகரித்துச் சென்றது.

சிஎஸ்கேவின் பலமான சுழற்பந்துவீச்சாளர்களை ஸ்வீப் செய்து விளையாடி பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்தார்கள். 10 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்தது மும்பை. அஷ்வின் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களை கொடுத்தார்கள். நூர் அஹமது ஓவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். ஐபிஎல் 2025-ல் முதல் அரை சதம் அடித்த ரோஹித் சர்மா, பதிரனாவைப் பார்த்துக் கொண்டார்.

மும்பையின் வெற்றிக்கு 36 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த 10 பந்துகளிலேயே மும்பை வெற்றி இலக்கை அடைந்துவிட்டது. 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த மும்பை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in