
பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
பெர்த் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் கலந்துகொள்ளாத கேப்டன் ரோஹித் சர்மா 2-வது டெஸ்டில் விளையாடவுள்ளார்.
பெர்த் டெஸ்டில் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க வீரராகக் களமிறங்கிய ராகுல், முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 77 ரன்களும் எடுத்தார். இரு இன்னிங்ஸிலும் ஆஸி. பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டது அவர் மட்டும்தான். இதனால் 2-வது டெஸ்டிலும் தொடக்க வீரராக அவர் தொடர்வாரா என்கிற கேள்வியும் விவாதமும் எழுந்தது.
இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கு முன்னதாக பேட்டியளித்த ரோஹித் சர்மா, “முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதில் கேஎல் ராகுல் - ஜெயிஸ்வால் கூட்டணிக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, அதில் எந்த மாற்றுமும் செய்ய வேண்டாம் என நினைக்கிறேன். வெளிநாட்டில் ராகுல் விளையாடும் விதத்தை பார்க்கையில், தொடக்க வீரராக களமிறங்க அவர் தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2-வது டெஸ்டில் ரோஹித் சர்மா நடுவரிசையில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.