உலகின் நெ. 1 வீரராகும் ரோஹன் போபண்ணா!

கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இரட்டையர் பிரிவில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்தியாவின் ரோஹன் போபண்ணா, இரட்டையர் பிரிவில் உலகின் நெ. 1 வீரராகி சாதனை படைக்கவுள்ளார்.

இந்தச் சாதனையை 43 வயதில் படைத்துள்ளதன் மூலம், முதலிடத்துக்கு முன்னேறியுள்ள மிக மூத்த வீரர் என்கிற சாதனையை போபண்ணா படைக்கவுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் இணைந்து போபண்ணா விளையாடி வருகிறார். காலிறுதிச் சுற்றில் ஆர்ஜென்டினாவின் மேக்ஸிமோ கான்ஸாலெஸ் மற்றும் ஆண்ட்ரேஸ் மோல்டெனி ஆகியோரை போபண்ணா இணை எதிர்கொண்டது. இந்தச் சுற்றில் போபண்ணா மற்றும் எப்டென் 6-4, 7-6 என்கிற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்கள்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் போபண்ணா முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸுக்கு முன்பு இரட்டையர் பிரிவில் உலகின் மூன்றாம் நிலை வீரராக போபண்ணா இருந்தார். தற்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதன்மூலம் முதலிடத்துக்கு முன்னேறவுள்ளார். முன்னதாக அமெரிக்காவின் ராஜீவ் ராம் அக்டோபர் 2022-ல் 38 வயதில் உலகின் நெ. 1 வீரரானார். இவரது சாதனையை போபண்ணா முறியடிக்கவுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in