இன்னிங்ஸ் தோல்வி: பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் அதிரடி மாற்றம்!

சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரபல நடுவர் அலீம் தார் பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னிங்ஸ் தோல்வி: பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் அதிரடி மாற்றம்!
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்தும், இன்னிங்ஸ் தோல்வி கண்ட முதல் அணி எனும் மோசமான சாதனையை படைத்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் இந்த தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் முன்னாள் வீரரான ஆகிப் ஜாவெத், அஸார் அலி, பிரபல நடுவர் அலீம் தார் ஆகியோர் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் வீரர் முஹமது யூசஃப் விலகினார். ஆகஸ்ட், 2021 முதல் பாகிஸ்தான் அணி 26 தேர்வாளர்களைப் பயன்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கான பாகிஸ்தான் அணியை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேர்வுக் குழுவே தேர்வு செய்யும்.

பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 6 டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் அந்த அணி புதிய கேப்டனைத் தேடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி இதுவரை எந்த டெஸ்டிலும் வெற்றி பெறவில்லை.

எனவே, 2-வது டெஸ்டுக்கு முன்பாக அணியில் முக்கியமான மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்வுக் குழுவில் நடுவர் ஒருவர் இணைந்துள்ளதும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபல நடுவர் அலீம் தார், சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 1986 - 1998 வரை 17 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 18 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடிய இவர், தனது ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறையினரை வழிநடத்தும் வகையில் ஒரு ஆலோசகராக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in