

சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஹெச்) சார்பில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி இந்தாண்டு இந்தியாவில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது. நவம்பர் 28 அன்று தொடங்கும் இந்தப் போட்டி டிசம்பர் 28 அன்று நிறைவடைகிறது. இந்தப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி 2025 தொடக்கத்தில் தகுதி பெற்றது.
இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான உறவு இல்லை. எனவே, இந்தியாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் தான் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகியுள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025-க்குத் தகுதி பெற்ற பாகிஸ்தான், இந்தப் போட்டியில் பங்கேற்காது என்பதை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு மாற்றாக இப்போட்டியில் பங்கேற்கும் அணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரூ. 55 கோடி செலவில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் என்றும் 72 ஆட்டங்கள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
Pakistan has announced its withdrawal from the Junior Hockey World Cup scheduled to be held in Chennai and Madurai.
FIH | International Hockey Federation | Junior Hockey World Cup | Pakistan | Pakistan Hockey Federation | Pakistan | Operation Sindoor | India Pakistan |