
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 4-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய அணி.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 3-வது நாளிலும் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 4-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதன் மூலம் இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்தது.
* ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
* பாட்மிண்டனில் ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதி பெற்ற ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்றனர்.
* மகளிர் ஒற்றையர் வில்வித்தையில் பஜன் கவுர் அடுத்தடுத்து இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுது பெற்றுள்ளார்.
* பாய்மர படகுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் 5-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
* குத்துச்சண்டையில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா சார்பாக பங்கேற்ற அமித் பங்கல், ப்ரீத்தி பவார் ஆகியோர் காலிறுதிக்கு முந்தயை சுற்றில் தோல்வி அடைந்தனர். மேலும் ஜாஸ்மின் லம்போரியா முதல் சுற்றுடன் வெளியேறினார்.
எனவே, 4-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. இந்தியா 2 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 33-வது இடத்தில் உள்ளது.
ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் மகளிர் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனிகா பத்ரா விளையாடவுள்ளார்.