ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 4-வது நாளான இன்று ஆடவர் ஹாக்கியின் லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அதனை கோலாக மாற்றினார்.
இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தில் 19-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு சிறப்பான கோலை அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க உதவினார்.
2-வது பகுதியான 30-வது நிமிடத்தின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதன் பிறகு அயர்லாந்து அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட 3-வது பகுதியான 45-வது நிமிடத்தின் முடிவிலும் கோல் கணக்கில் எந்த மாற்றமும் இல்லை.
கடைசி பகுதியிலும் அயர்லாந்து அணியால் கோல் அடிக்க முடியாத காரணத்தால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே, முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது ஆட்டத்தில் டிரா செய்தது.