10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் 3-வது நாளான இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
ஒரே ஒரு புள்ளியில் தங்கப் பதகத்துக்கான ஆட்டத்தை தவறவிட்டது இந்திய அணி.
இறுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு அணியான ரிதம் - அர்ஜூன் சிங் இணை 10-வது இடத்தைப் பிடித்து வெளியேறியது.
அதேபோல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான ரமிதா 7-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.