ஓய்வு பற்றி தற்போது முடிவெடுக்க முடியாது: மனம் திறந்த எம்எஸ் தோனி

"ஐபிஎல் முடிந்தவுடன் 6 முதல் 8 மாதங்கள் நான் கடுமையாக உழைக்க வேண்டும்."
ஓய்வு பற்றி தற்போது முடிவெடுக்க முடியாது: மனம் திறந்த எம்எஸ் தோனி
ANI
1 min read

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடு வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த எம்எஸ் தோனி கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு உதவினார். ஆட்டம் முடிந்த பிறகு ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த எம்எஸ் தோனி, தற்போதைய நிலையில் முடிவெடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறினார்.

"எனக்கு 43 வயது ஆகிறது என்பதை மறந்துவிட வேண்டாம். நீண்ட காலமாக நான் விளையாடி வருகிறேன். ஐபிஎல் போட்டியில் எனது கடைசி ஆண்டு எது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. எனவே, நான் விளையாடுவதைப் பார்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

ஆண்டுக்கு இரு மாதங்கள் மட்டுமே நான் விளையாடுகிறேன். இதுபோன்ற அழுத்தங்களையெல்லாம் என் உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காக, தற்போது ஐபிஎல் முடிந்தவுடன் 6 முதல் 8 மாதங்கள் நான் கடுமையாக உழைக்க வேண்டும். எனவே, தற்போதைய நிலையில் முடிவெடுப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், செல்லுமிடங்களில் எல்லாம் அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அற்புதமானது" என்றார் எம்எஸ் தோனி.

சிஎஸ்கே என்றால் தோனி... தோனி என்றால் சிஎஸ்கே... என்றளவில் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வந்த நிலையில், ஐபிஎல் 2025 சிஎஸ்கேவுக்கு மோசமாக அமைந்தது. இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டுமே சிஎஸ்கே பெற்றுள்ளது. சிஎஸ்கேவின் தொடர் தோல்வி ரசிகர்களிடத்தில் விமர்சனத்தை எழுப்பியது. கடைசி 5 ஓவர்களில் மட்டுமே விளையாடக் கூடிய அளவுக்கு உடற்தகுதி கொண்ட தோனி, அணிக்குப் பாரமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தார்கள்.

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கையில், தோனி நீண்ட நேரம் பேட் செய்ய அவருடைய முழங்கால் அனுமதிப்பதில்லை என்றார். தோனியின் முழங்காலில் தேய்மானம் இருப்பதாகவும் ஃபிளெமிங் தெரிவித்திருந்தார். சிஎஸ்கேவின் தொடர் தோல்வி, நடப்பு ஐபிஎல் போட்டியில் பழைய தோனியாக விளையாட முடியாமல் இருப்பது உள்ளிட்டவை இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் என்ற பேச்சை ரசிகர்களிடத்தில் உருவாக்கியது.

இந்தச் சூழலில் தான் ஓய்வு பற்றி தற்போதைய நிலையில் முடிவெடுக்க எதுவும் இல்லை என தோனி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in