
நிதிஷ் ரெட்டியின் கிரிக்கெட் பயணத்தில், அவரது தந்தை செய்த தியாகங்கள் ஏராளம்.
21 வயதான நிதிஷ் ரெட்டி சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இத்தொடரில் 90 ரன்களை விளாசிய இவர், 2-வது டி20-யில் 74 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஐபிஎல் 2024-ல் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடிய இவர், 13 ஆட்டங்களில் 303 ரன்கள் அடித்தார். இந்நிலையில் இவரின் கிரிக்கெட் பயணத்தில், அவரது தந்தை செய்த தியாகங்கள் குறித்து பார்க்கலாம்.
நிதிஷ் ரெட்டியின் தந்தையான முத்யாலா ரெட்டி 2012 வரை விசாகப்பட்டினத்தில் அரசு பணியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதன் பிறகு உதய்பூருக்கு அவரை பணியிட மாற்றம் செய்ததால், நிதிஷின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். 25 வருட சேவை மீதமிருந்த நிலையில், பல எதிர்புகளைக் கடந்து இந்த முடிவை எடுத்துள்ளார் நிதிஷ் ரெட்டியின் தந்தை. உதய்பூருக்கு சென்றால் நிதிஷ் ரெட்டியின் கிரிக்கெட் பயணம் பாதிக்கப்படுமோ என்ற எண்ணத்தில், விசாகப்பட்டினத்திலேயே இருந்து தனக்கு வந்த ஓய்வூதியத்தை வைத்து நிதிஷ் ரெட்டியின் கிரிக்கெட் பயணத்துக்கு உதவியுள்ளார்.
இந்த பயணம் குறித்து கிரிக்பஸ் பேட்டியில் முத்யாலா ரெட்டி கூறியதாவது
“நான் பதிலளிக்க வேண்டிய ஒரே நபர் என் மனைவி மட்டும்தான். தேவையில்லாத செலவுகளை நாம் குறைக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் முழுமையாக சம்மதித்தார். இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதராவாக என் மனைவி இருக்கிறார். மகளின் படிப்பை கவனித்துக் கொள்ளுமாறும், நிதிஷ் மற்றும் அவரது கிரிக்கெட் பயணத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று என் மனைவியிடம் சொன்னேன். நிதிஷ் ரெட்டியுடன் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, அவருடையப் பயிற்சி முடியும் வரை காத்திருந்து முழு நேரத்தையும் அவருக்காகச் செலவிட்டேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.