
நீரஜ் சோப்ரா கிளாசிக் தடகள போட்டிக்கு பாகிஸ்தான் தடகள வீரர் அர்ஷத் நதீமை அழைத்ததற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நீரஜ் சோப்ரா அறிக்கை வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார்.
பெங்களூருவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். உலக தடகள வீரர்கள் பங்கேற்கும் வகையில் நீரஜ் சோப்ரா திட்டமிட்டிருந்தார். ஜேஎஸ்டபிள்யு ஸ்போர்ட்ஸ், இந்திய மற்றும் உலக தடகள கூட்டமைப்புடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறார் நீரஜ் சோப்ரா. அர்ஷத் நதீம் தவிர்த்து உலக நாடுகளைச் சேர்ந்த வேறு சில தடகள வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அர்ஷத் நதீமை அழைத்ததற்கு நீரஜ் சோப்ரா மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து மௌனம் கலைத்துள்ள நீரஜ் சோப்ரா, அறிக்கை மூலம் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
"இயல்பில் நான் குறைவாகப் பேசுபவன். அதற்காக எனக்குத் தவறு எனத் தோன்றும் விஷயத்துக்கு எதிராகப் பேசாமல் இருப்பவன் அல்ல. என் குடும்பத்தின் மீதான மதிப்பு மற்றும் நாட்டின் மீது நான் கொண்டுள்ள அன்பைக் கேள்விக்குள்ளாக்கும்போது நிச்சயமாகப் பேசாமல் இருக்க மாட்டேன்.
நீரஜ் சோப்ரா கிளாசிக்குக்கு (என்சி கிளாசிக்) அர்ஷத் நதீமை அழைத்ததற்கு நிறைய பேச்சுகள் எழுந்துள்ளன. பெரும்பாலும் வெறுப்பும் இழிவான பேச்சும் தான். என் குடும்பத்தைக் கூட விட்டுவைக்கவில்லை.
தடகள வீரர் என்ற முறையில் மற்றொரு தடகள வீரருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தான் அது. வேறு எதுவும் இல்லை. சிறந்த தடகள வீரர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தாயகமாக இந்தியா இருக்க வேண்டும் என்பது தான் என்சி கிளாசிக்கின் நோக்கமே. அனைத்துத் தடகள வீரர்களுக்கும் திங்கள்கிழமையே அழைப்பு விடுக்கப்பட்டது. பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரு நாள்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாட்டுக்கும் நாட்டு நலனுக்கும் தான் முன்னுரிமை. இந்தச் சம்பவத்தில் உற்றார் உறவினரை இழந்து வாடுபவர்களுடன் தான் என் மனம் இருக்கிறது. பஹல்காமில் நிகழ்ந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தேசத்துடன் நானும் வேதனையிலும் கோபத்திலும் இருக்கிறேன். இந்தியாவின் பதிலடி நம் வலிமையைக் காட்டும், நீதி வழங்கப்படும் என நம்புகிறேன்.
என்னையும் என் குடும்பத்தினரையும் எந்தக் காரணமும் இல்லாமல் குறிவைப்பவர்களிடம் என்னைப் பற்றி விளக்கம் கொடுப்பது வேதனையளிக்கிறது. நாங்கள் சாதாரணக் குடும்பம். சில ஊடகங்கள் என்னைச் சுற்றி பொய்யான விஷயங்களைக் கட்டமைக்கின்றன. நான் பேசுவதில்லை என்பதற்காக அவை அனைத்தும் உண்மையாகிவிடாது.
பார்வைகள் எப்படி மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் கடினமாக இருக்கிறது. என் அம்மாவின் எளிமைக்காகவும் அவருடையப் பார்வைக்காகவும் ஓராண்டுக்கு முன்பு பாராட்டுகள் குவிந்தன. இன்று அதே மக்கள் அதே கருத்துக்காக என் அம்மாவைக் குறிவைக்கிறார்கள்" என்று நீரஜ் சோப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.