
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2025 போட்டியின் இறுதிச் சுற்றில் தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆகியுள்ளது. டபிள்யுபிஎல் கோப்பையை இருமுறை வென்று சாதனை படைத்துள்ளது ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான மும்பை அணி.
கடந்த இரு டபிள்யுபிஎல் போட்டிகளிலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தில்லி அணி, டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணி 14 ரன்களுக்குள் இரு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாட் சிவர் பிரண்ட் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூட்டணி, 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார்கள். நாட் சிவர் பிரண்ட் 30 ரன்களுக்கும் ஹர்பன்ப்ரீத் கெளர் 44 பந்துகளில் 66 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். கடைசியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி ஒரு சிக்ஸருடன் 10 ரன்கள் எடுத்தார். மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
தில்லி அணியின் இன்னிங்ஸில் முக்கிய பேட்டர்கள் நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ஜெமிமா 30 ரன்கள் எடுத்தார். 13 ஓவர்கள் முடியும் முன்பு 6 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தது தில்லி. அப்போது, ஆட்டத்தில் மும்பை ஆதிக்கம் செலுத்திய தருணம் அது. இதன்பிறகு மரிஸான் காப் - நிக்கி பிரசாத் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். மரிஸான் காப் வேகமாக ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி நகர்ந்தார். எனினும் வெற்றிக்கு 27 தேவைப்படும்போது சிக்ஸர் அடிக்க முயன்று 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மாரிஸான் காப். அடுத்தப் பந்திலேயே ஷிகா பாண்டே போல்ட் ஆகி வெளியேறினார். கடைசியில் தில்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துத் தோற்றது.
இதையடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டபிள்யுபிஎல் 2025 போட்டியின் சாம்பியன் ஆனது. ஏற்கெனவே இதே மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற டபிள்யூபிஎல் 2023 இறுதிச் சுற்றிலும் தில்லியைத் தோற்கடித்து சாம்பியன் ஆன மும்பை அணி, மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.