
ஐபிஎல் 2025-ல் தொடர்ந்து நான்கு வெற்றிகளைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்திலிருந்து மீண்டெழுந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல தோல்வியுடன் தான் தொடங்கியது. சிஎஸ்கேவுக்கு எதிராக சேப்பாக்கத்திலும் குஜராத்துக்கு எதிராக அஹமதாபாதிலும் தோல்வியைத் தழுவியது மும்பை.
சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை. இதிலிருந்து மும்பையின் ஓட்டம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லக்னௌவுக்கு எதிராகவும் ஆர்சிபிக்கு எதிராகவும் மீண்டும் தோல்வியடைந்து கடும் நெருக்கடிக்குள்ளானது மும்பை இந்தியன்ஸ். புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸுடன் கடைசி இடங்களுக்குப் போட்டியிட்டுக் கொண்டிருந்தது.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக 205 ரன்கள் எடுத்திருந்தபோதிலும், கருண் நாயரின் அதிரடியால் 5-வது தோல்வியைச் சந்திக்கும் தருணத்தில் இருந்தது மும்பை இந்தியன்ஸ். சரியான நேரத்தில் சுழற்பந்துவீச்சைக் கொண்டு வருமாறு ரோஹித் சர்மா வெளியிலிருந்து அறிவுறுத்த, மிட்செல் சான்ட்னர் மற்றும் கரண் சர்மாவைக் கொண்டு வந்தார் ஹார்திக் பாண்டியா. தில்லி வசம் இருந்த வெற்றி மும்பை பக்கம் திரும்பியது.
இந்த நம்பிக்கை தான் மும்பைக்கு உத்வேகமாக அமைந்தது. கூடுதல் உத்வேகமாக, அடுத்த இரு ஆட்டங்களும் வான்கடேவில் நடைபெற்றன. சிஎஸ்கே நிர்ணயித்த 177 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 26 பந்துகள் மீதமிருக்க அசாத்தியமான வெற்றியைப் பெற்று ரன் ரேட்டை அதிகரித்தது. அடுத்து சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 144 ரன்கள் என்ற வெற்றி இலக்கையும் 26 பந்துகள் மீதமிருக்க அடைந்து புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றி இது.
மற்றொரு நற்செய்தியாக பவர்பிளேயில் தடுமாறிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, 2016-க்கு பிறகு முதன்முறையாக அடுத்தடுத்து இரு அரை சதங்கள் அடித்து ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். ரோஹித் தனது ஆட்டத்தை ஆரம்பித்தவுடன் சூர்யகுமார் யாதவின் ஆட்டமும் நிலையானதாக மாறி அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது. அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் 373 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் சூர்யகுமார் யாதவ்.
இதனால், கடந்த இரு ஆட்டங்களில் மும்பையின் வெற்றிக்கு திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, நமன் திர் உதவி தேவைப்படவே இல்லை.
டிரென்ட் போல்டுக்கு புதிய பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை நம்பிக்கையுடன் ஏற்று யார்க்கரில் கலக்கி இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ராவும் அணிக்கு திரும்பி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறார். தொடர் வெற்றியும், அனுபவ வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ளதும் மும்பையைக் கட்டுக்கடங்காத காட்டாறாக மாற்றியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் மிக முக்கியமான கட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு அனைத்தும் கைக்கூடி வர, 9-வது இடத்தில் போராடிக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் தற்போது 3-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சன்ரைசர்ஸும் சிஎஸ்கேவும் இன்னும் கடைசி இரு இடங்களிலேயே தங்கியுள்ளன.