சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?

"பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முயல வேண்டும். முடியவில்லையென்றால், அடுத்தாண்டுக்கான சரியான விளையாடும் லெவனைத் தேர்வு செய்து வலிமையுடன் வர வேண்டும்."
சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?
ANI
1 min read

ஞாயிறன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது சிஎஸ்கே.

இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் சிஎஸ்கே இரு வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கெனவே பிளேஆஃப்புக்குச் செல்வது கடினமாக உள்ள சூழலில் இந்தத் தோல்வி சிஎஸ்கேவை மேலும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் தோனியும் இந்த நிலைமையை வெளிப்படுத்தினார்.

"பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். நிறைய வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. எனவே, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முயல வேண்டும். முடியவில்லையென்றால், அடுத்தாண்டுக்கான சரியான விளையாடும் லெவனைத் தேர்வு செய்து வலிமையுடன் வர வேண்டும்" என்றார் எம்எஸ் தோனி.

தோனியே நம்பிக்கை இழக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறதா சிஎஸ்கேவின் நிலைமை என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும்.

சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் முதலில் வெற்றி பெற வேண்டும். அதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் நெட் ரன் ரேட்டில் -1.392 புள்ளிகளை வைத்துள்ளது சிஎஸ்கே. மற்ற 9 அணிகளுடன் ஒப்பிடும்போது சிஎஸ்கேவுக்குத்தான் மோசமான நெட் ரன் ரேட்.

ஒருவேளை ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தால் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை சிஎஸ்கே நிறைவு செய்யும்.

ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை 16 புள்ளிகளைப் பெற்றுவிட்டால், பிளேஆஃப் சுற்றை உறுதிபடுத்திவிடலாம்.

ஐபிஎல், 10 அணிகளைக் கொண்ட போட்டியாக 2022-ல் மாறிய பிறகு, 2024-ல் மட்டும்தான் 14 புள்ளிகளைப் பெற்ற ஓர் அணி அதாவது ஆர்சிபி, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

கடந்தமுறை சிஎஸ்கே 14 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், ஆர்சிபியிடம் நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி, சிஎஸ்கே, தில்லி, லக்னௌ என 4 அணிகள் 14 புள்ளிகளில் இருந்தன. இதில் ஆர்சிபி கூடுதல் நெட் ரன்ரேட்டை வைத்திருந்ததால், அதன் அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, முதலில் குறைந்தபட்சம் 14 புள்ளிகளையாவது சிஎஸ்கே பெற வேண்டும்.

ஆனால், சிஎஸ்கே தற்போது வைத்திருக்கும் நெட் ரன்ரேட்டைப் பார்க்கும்போது மீதமுள்ள 6 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே வெற்றியடைந்து 14 புள்ளிகள் வைத்திருந்தால் பிளேஆஃப் வாய்ப்பு கேள்விக்குறி தான். எனவே இப்படி நெட்ரன்ரேட்டை நம்புவதற்குப் பதிலாக மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குச் செல்வதே உத்தமமாக இருக்கும்.

ஆனால் சிஎஸ்கே விளையாடுவதைப் பார்த்தால் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in