
ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நார்த் ஸ்டான்டுக்கு சூட்டப்பட்டிருந்த தன் பெயரை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் நீக்கியதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தை நாட முன்னாள் வீரர் முஹமது அசாருதீன் முடிவு செய்துள்ளார்.
ஹைதராபாதின் உப்பலில் உள்ளது ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம். இது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக அசாருதீன் இருந்தபோது, டிசம்பர் 2019-ல் முறையாக பொதுக்குழு ஒப்புதல் பெறாமல், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நார்த் ஸ்டேன்டுக்கு தன் பெயரைச் சூட்டியதாக அசாருதீன் மீது புகார் எழுந்தது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் புகாரளிக்கப்பட்டது. முன்பு விவிஎஸ் லக்ஷமன் பெவிலியன் என்று அழைக்கப்பட்டு வந்தது.
இதன் அடிப்படையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் குறைதீர்க்கும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். ராஜீவ் மைதானத்தின் நார்த் ஸ்டேன்டுக்கு அசாருதீன் பெயர் சூட்டப்பட்டதை நீக்க குறைதீர்க்கும் அதிகாரி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக முஹமது அசாருதீன் தெரிவித்துள்ளார். "ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் விதிகளின்படி, குறைதீர்க்கும் அதிகாரியின் பதவிக் காலம் என்பது ஓராண்டு தான். இந்த வழக்கில் அவருடையப் பதவிக் காலம் பிப்ரவரி 18, 2025 முடிவடைந்தது. அதன்பிறகு பிறப்பித்த எந்த உத்தரவும் செல்லுபடியாகாது. அவருடையப் பதவிக் காலம் நீட்டிக்கப்படாதபோது, அவரால் எப்படி உத்தரவிட முடியும்?" என்று அசாருதீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.