லக்னௌ அணியின் அடுத்த இரு ஆட்டங்களில் மயங்க் யாதவ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.
ஐபிஎல் போட்டி தொடங்கி இதுவரை 25 ஆட்டங்கள் முடிந்தது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள 26-வது ஆட்டத்தில் தில்லி - லக்னௌ அணிகள் விளையாடுகின்றன.
இந்த ஆட்டத்தில் லக்னௌ அணியை சேர்ந்த மயங்க் யாதவ் பங்கேற்கமாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் லேங்கர் கூறியுள்ளார்.
லேங்கர் பேசியதாவது:
“குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு அவருக்கு இடுப்பு பகுதியில் தொந்தரவு ஏற்பட்டதாக அவர் உணர்ந்தார். மருத்துவர்களின் அறிவுரையின்படி அனைத்தும் சரியாகதான் இருந்தது.
ஆனால், அந்த ஆட்டத்தில் அவர் ஒரு ஓவர் வீசிய பிறகு மீண்டும் தொந்தரவு ஏற்பட்டதை உணர்ந்தார். எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார்.
அவர் குணமாக இன்னும் நேரம் எடுக்கும் என்பதால் அடுத்த ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகம். ஏப்ரல் 19-ல் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் அவர் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
மயங்க் யாதவ் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணியை திணறடித்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக அவர் இன்றைய ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். மேலும், லக்னௌ அணியின் அடுத்த ஆட்டத்திலும் மயங்க் யாதவ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு பதிலாக மோஷின் கான் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.