போர் பதற்றம்: தரம்சாலாவில் ஐபிஎல் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தம்

தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மே 11 அன்று மோதவிருந்த ஆட்டம் அஹமதாபாதுக்கு மாற்றப்பட்டது.
போர் பதற்றம்: தரம்சாலாவில் ஐபிஎல் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தம்
ANI
1 min read

தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடி தரும் விதமாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையை ஒட்டியுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட விமான நிலையங்களில் தரம்சாலா விமான நிலையமும் ஒன்று.

இந்நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் எல்லை தாண்டிய தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது. ஏவுகணை, ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஜம்மு முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் அமிருதசரிலும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்து வருவதால் அங்கும் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல் காரணமாக பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். பிரியான்ஷ் ஆர்யா 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முதலில் மின்விளக்கு பிரச்னை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் முன்னெச்சரிக்கையாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தலைவர் அருண் துமால் ரசிகர்களை மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு கூறும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மே 11 அன்று மோதவிருந்த ஆட்டம் அஹமதாபாதுக்கு மாற்றப்பட்டது. இன்று தரம்சாலா செல்லவிருந்த மும்பை அணி, இந்த மாற்றம் காரணமாகப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in