
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025-ல் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் முதல் மூன்று ஓவர்களில் சற்று பொறுமையாக விளையாடினார்கள். அடுத்த இரு ஓவர்களில் அதிரடி காட்ட 6 ஓவர்களில் பஞ்சாப் 56 ரன்கள் எடுத்தது. பவர்பிளேவுக்கு பிறகும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரியான்ஷ் ஆர்யா 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.
32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் இன்னிங்ஸின் வேகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றார். முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில், 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஆர்யா. ஆர்யா விக்கெட்டுக்கு பிறகு சரவெடியாய் வெடித்த பிரப்சிம்ரன் சிங் 38 பந்துகளில் அரை சதம் அடித்து சுழற்பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார். இவர் 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, பேட்டிங் வரிசையை மாற்றி பஞ்சாப் சொதப்பியது. மேக்ஸ்வெல், யான்சென் ரன் வேகத்தைக் குறைத்து 10 ரன்கள்கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ஷ்ரேயஸும் தடுமாற கடைசி நேரத்தில் அவர் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். ஜோஷ் இங்லிஸ் இரு பவுண்டரிகள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பஞ்சாப். கடைசி 5 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது கொல்கத்தா.
இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. நீண்ட நேரம் இடைவிடாது மழை பெய்துகொண்டே இருந்ததால், ஆட்டத்தைக் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தார். ஐபிஎல் 2025-ல் மழையால் கைவிடப்படும் முதல் ஆட்டம் இது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. பஞ்சாப் 11 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கொல்கத்தா 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.