மும்பைக்கு 3-வது தோல்வி. பொறுப்புடன் விளையாடி வெற்றியடைந்த லக்னெள அணி!

பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னெள, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.
மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்ANI
2 min read

லக்னெளவில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் ஆட்டத்தில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னெள, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.

ஆட்டம் தொடங்கியபோதே முக்கியமான செய்தி ஒன்று கிடைத்தது. ரோஹித் சர்மா இல்லை. பயிற்சியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக பாண்டியா தெரிவித்தார். இதனால் வில் ஜாக்ஸுக்கு வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்று எல்லா கேப்டன்களைப் போலவும் முதலில் பந்துவீச முடிவெடுத்தார். லக்னெள அணியில் தமிழக வீரர் எம். சித்தார்த்துக்குப் பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார்.

முதல் ஓவரில் 4-வது பந்தில் மிட்செல் மார்ஷின் பேட்டின் முனையில் பந்து பட்டு விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆனது. யாரும் அதைக் கவனிக்காததால் அப்பீல் செய்யவில்லை. மிட்செல் மார்ஷ் இந்த அதிர்ஷ்டத்தை நன்குப் பயன்படுத்திக் கொண்டார். முதல் 3 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்தது மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் கூட்டணி. அஷ்வனி குமார் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் மார்ஷ், 3 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார். அந்த ஓவரில் 23 ரன்கள்! பவர்பிளேயில் லக்னெளவுக்கு விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள். 27 பந்துகளில் மிட்செல் மார்ஷ் அரை சதமெடுத்தார். பவர்பிளேயில் அவர் மட்டுமே 30 பந்துகளை எதிர்கொண்டார்.

பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரில் 60 ரன்களுடன் புதூர் பந்தில் ஆட்டமிழந்தார் மிட்செல் மார்ஷ். நிகோலஸ் பூரன் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து 12 ரன்களுடன் பாண்டியா பந்தில் வீழ்ந்தார். 10 ஓவர்களில் 100/2 என அட்டகாசமான நிலைமையில் இருந்தது லக்னெள.

ஐபிஎல் 2025 போட்டியில் மோசமாக பேட்டிங் செய்து வரும் ரிஷப் பந்த் இன்றும் 2 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். நடு ஓவர்களில் மார்க்ரமும் பதோனியும் இன்னிங்ஸைக் கட்டமைத்தார்கள். சாண்ட்னர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 46 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல்-லில் அவருடைய மோசமான பந்துவீச்சு இது. 15 ஓவர்களில் லக்னெள 146 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 5 ஓவர்களில் சொதப்பிவிட்டால் முடிந்தது கதை என்கிற நிலைமையில் 16-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தாலும் 30 ரன்களுக்கு அஷ்வனி குமாரின் பந்தில் ஆட்டமிழந்தார் பதோனி. ஒரு பொறுப்பான வீரராக விளையாடிய மார்க்ரம், 17-வது ஓவரில் 34 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு 18-வது ஓவரில் 53 ரன்களுக்கு பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். பூரனும் ரிஷப் பந்தும் சரியாக விளையாடாமல் போனாலும் மற்ற பேட்டர்கள், அணியைப் பத்திரமாகக் கரை சேர்த்தார்கள். டேவிட் மில்லர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்ட உதவினார். லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரோஹித் இல்லாததால் ரையன் ரிக்கெல்டன் - வில் ஜேக்ஸ் ஜோடி களமிறங்கியது. வில் ஜேக்ஸ் 5 ரன்களுக்கு ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். மூன்று மாதங்கள் கழித்து பந்துவீசும் ஆகாஷ் தீப் ஆரம்பத்திலேயே விக்கெட் எடுத்து தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டார். ரையன் ரிக்கெல்டன் 10 ரன்களுக்கு ஷார்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழக்க, களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ். ஆகாஷ் தீப் வீசிய 4-வது ஓவரில் பிரித்து மேய்ந்தார் நமன் திர். தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களும் இரு பவுண்டரிகளும் அவர் ஓவரில் விளாசினார். பவர்பிளேயில் மும்பை 64/2 என சற்று சரியான நிலைமையில் இருந்தது. 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் நமன் திர். 10 ஓவர்களில் மும்பையின் ஸ்கோர் 101/3. இந்தக் கட்டத்தில் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இலக்குக்கு ஏற்ற அதிரடி ஆட்டத்தை விளையாடும் பொறுப்பை சூர்யகுமார் எடுத்துக்கொண்டார். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரிகள் அடித்துக்கொண்டே இருந்தார். 31 பந்துகளில் அரை சதமெடுத்தார். 15 ஓவர்களின் முடிவில் 143 ரன்கள் எடுத்தது மும்பை. கடைசி 5 ஓவர்களில் 61 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமிருந்தன. சூர்யகுமார், 17-வது ஓவரின் முதல் பந்தில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு இலக்கை வெற்றிகரமாக அடையும் பொறுப்பு பாண்டியா - திலக் வர்மா வசம் வந்தது.

17-வது ஓவரில் 12 ரன்களும் 18-வது ஓவரில் 11 ரன்களும் கிடைத்தன. கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை. 19-வது ஓவரை அட்டகாசமாக வீசினார் ஷார்துல் தாக்குர். அவர் வீசிய ஃபுல்டாஸ் பந்துகளை பவுண்டரிக்குக்கூட அடிக்க முடியாமல் தடுமாறினார்கள் பாண்டியாவும் திலக் வர்மாவும். 19-வது ஓவரில் 7 ரன்கள் மட்டும் கொடுத்து வெற்றிக்கு அருகில் சென்ற மும்பையைத் தடுத்து நிறுத்தினார் ஷார்துல் தாக்குர். 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்த திலக் வர்மா, ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேறி சான்ட்னர் உள்ளே நுழைய வாய்ப்பளித்தார்.

ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் பாண்டியா. ஆட்டம் மிகவும் பரபரப்பானது. அதற்குப் பிறகு பாண்டியாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. கடைசியில் மும்பை அணி 20 ஓவர்களில் 191/5 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ள மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in