
தோனி மீண்டும் கேப்டன் ஆனாலும் அதே அணி தானே? நிலைமை ஒரே நாளில் மாறுமா?
சென்னை சேப்பாக்கத்தில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்த சிஎஸ்கே அணி அதன் மோசமான தோல்விகளில் ஒன்றை இன்று சந்தித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாகத் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சிஎஸ்கே தோற்றுள்ளது. இந்த வருடம் இதற்கு மேலும் சிஎஸ்கே அணி மீது நம்பிக்கை வைக்கமுடியாது என்கிற நிலைமைக்கு ரசிகர்கள் வந்திருப்பார்கள்.
பேட்டிங்கில் இவ்வளவு தூரம் சொதப்பிய பிறகு பந்துவீச்சு மட்டும் எப்படிச் சிறப்பாக இருக்கும்?
பந்துவீசியபோது ஆரம்பத்தில் இருந்தே சிஎஸ்கே வீரர்களின் உடல்மொழி சோர்வாக இருந்தது. இதை கேகேஆர் பேட்டர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வரவேற்றார் டி காக். 4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தது கேகேஆர். கம்போஜ் தனது 2-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து நன்கு விளையாடி வந்த குயிண்டன் டி காக்கை 23 ரன்களில் வீழ்த்தினார். பவர்பிளேயில் 7 சிக்ஸர்கள் அடித்து 71 ரன்கள் எடுத்தது கேகேஆர்.
18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளிடன் மிரட்டிக் கொண்டிருந்த சுனில் நரைன் 44 ரன்களுடன் நூர் அஹமதுவின் பந்தில் போல்ட் ஆனார். கடைசியில் 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது கேகேஆர். ரஹானே 20, ரிங்கு சிங் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இவ்வளவு மோசமான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் தான் உள்ளது. கடைசி இடத்தில் சன்ரைசர்ஸ் இன்னமும் நீடிக்கிறது.
683 நாள்களுக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றார் தோனி. இதனால் இன்று மாலை உற்சாகத்துடன் சேப்பாக்கத்துக்கு வந்தார்கள் ரசிகர்கள். தோனி கேப்டனானதால் ஏதாவது ஒரு மாற்றம் நடக்கும் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.
டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கையே தேர்வு செய்யவிருந்ததாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார். இந்தப் பருவதில் இதற்கு முன்பு விளையாடிய எல்லா ஆட்டங்களிலும் 2-வதாகத்தான் பேட்டிங் செய்தது சிஎஸ்கே.
சிஎஸ்கேவில் ருதுராஜ் கெயிக்வாட், முகேஷ் சௌதரி ஆகியோருக்குப் பதில் ராகுல் திரிபாதி மற்றும் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டார்கள். கேகேஆரில் ஸ்பென்செர் ஜான்சனுக்குப் பதில் மொயீன் அலி சேர்க்கப்பட்டார்.
தொடக்க பேட்டர்களாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார்கள். முதல் மூன்று ஓவர்களில் இரு பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட, 16 ரன்களை தாண்டவில்லை சிஎஸ்கே.
மொயீன் அலி பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற கான்வே 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 6 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. மீண்டும் மற்றுமொரு சொதப்பலான பவர்பிளே.
விஜய் ஷங்கர் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடிக்க முயன்று ரன்னை உயர்த்தப் பார்த்தாலும், திரிபாதியால் வேகமாக விளையாட முடியவில்லை. இரு கேட்ச் வாய்ப்புகளிலிருந்து தப்பிய விஜய் ஷங்கர் 29 ரன்களுக்கு வருண் சக்ரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் சிஎஸ்கே 61 ரன்கள் எடுத்தது.
விஜய் ஷங்கர் விக்கெட்டுக்கு பிறகு சிஎஸ்கேவின் நிலை இன்னும் மோசமானது. 16 ரன்களுக்கு திரிபாதி ஆட்டமிழந்தவுடன், அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கினார்கள், பலனளிக்கவில்லை. அவர் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இம்பாக்ட் வீரராக கூடுதல் பேட்டரை களமிறக்கத் திட்டமிட்டு தீபக் ஹூடாவை அனுப்பியது சிஎஸ்கே. இதுவும் பலனளிக்கவில்லை. எந்த இம்பாக்டையும் ஏற்படுத்தாமல் டக் அவுட் ஆனார் ஹூடா.
சரி, எம்எஸ் தோனியாவது காப்பாற்றுவார் என்று பார்த்தால், 1 ரன்னுக்கு நரைன் சுழலில் ஆட்டமிழந்தார்.
டி20 ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களைத் தண்டிக்கும் வகையில் 19-வது ஓவருக்கு முன்பு 63 பந்துகளுக்கு பவுண்டரியே அடிக்காமல் விளையாடியது சிஎஸ்கே. கடைசி இரு ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை அடித்து ஓரளவு ஆறுதல் அளித்தார் ஷிவம் துபே. அணியின் ஸ்கோர் ஒருவழியாக 100 ரன்களை கடந்தது.
20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 31 ரன்கள் எடுத்தார். கேகேஆரில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவின் மூன்றாவது குறைந்தபட்ச ரன்கள்.
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே எடுத்த குறைவான ரன்கள்.
முதலில் பேட்டிங் செய்து எடுத்த இரண்டாவது மிகக் குறைந்த ரன்கள் (முன்பு 97 ரன்கள், 109 ரன்கள்).