ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார் விராட் கோலி.
நடப்பு ஐபிஎல் பருவத்தில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 67 பந்துகளில் சதம் அடித்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் மெதுவாக சதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் மணீஷ் பாண்டேவுடன் இணைந்தார்.
மணீஷ் பாண்டே ஐபிஎல்-லில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் ஆவார். 67 பந்துகளில் சதமடித்த அவர் மெதுவாக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இப்போது அதில் விராட் கோலியும் இணைந்தார்.
ஐபிஎல்-லில் மெதுவாக சதம் அடித்த வீரர்கள்
விராட் கோலி - 67 பந்துகள்
மணீஷ் பாண்டே - 67 பந்துகள்
சச்சின் - 66 பந்துகள்
டேவிட் வார்னர் - 66 பந்துகள்
பட்லர் - 66 பந்துகள்
இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தவும் உதவிய கோலியை மிக மெதுவாக சதம் அடித்தார் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் கோலியின் ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்கவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி அடித்த 183 ரன்களில் பெரும்பாலான ரன்களை அடித்த கோலி இன்னுமும் ரன்களை எடுத்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 316 ரன்கள் எடுத்துள்ள கோலி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆர்சிபி அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது அவர்களின் பந்துவீச்சுதான். 180 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அதை கட்டுப்படுத்த பல முறை தவறியுள்ளது ஆர்சிபி அணி. கடந்த வருடங்களில் பலமுறை இதுபோல நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி சதமடித்த கோலியை இவ்வாறு விமர்சிப்பது, அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.