
ஆர்சிபிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு கொண்டாடிய விதம் பற்றி தில்லி கேபிடல்ஸ் வீரர் கேஎல் ராகுல் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 163 ரன்கள் எடுத்தது. தில்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தில்லி கேபிடல்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, கேஎல் ராகுல் சற்று ஆக்ரோஷமான முறையில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். கையிலிருந்த பேட்டை எடுத்து களத்தில் நடும் வகையிலான கொண்டாட்டமாக அது அமைந்தது.
தில்லி கேபிடல்ஸ் பகிர்ந்த காணொளியில் தனது கொண்டாட்டத்தைப் பற்றி ராகுல் கூறியதாவது:
"சின்னசாமி மைதானம் எனக்கு மிகவும் பிரியமான இடம். வெற்றிக்குப் பிறகான என்னுடையக் கொண்டாட்டமானது, எனக்குப் பிடித்த படங்களில் ஒன்றான காந்தாராவில் இடம்பெற்ற காட்சி. இது என்னுடைய மைதானம், இங்கு தான் நான் வளர்ந்தேன் என்பதன் சிறிய நினைவூட்டல்தான் அந்தக் கொண்டாட்டம்" என்றார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் தில்லி கேபிடல்ஸ் 4-ல் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.