ராம நவமி பண்டிகை தினத்தை முன்னிட்டு அன்று நடக்கவிருந்த ஐபிஎல் ஆட்டத்திற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 22 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான முதற்கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் 2-ம் கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 17 அன்று கேகேஆர் - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் ராம நவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களைக் கருதி இந்த ஆட்டத்திற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் ஆட்டம் மற்றும் ராம நவமி பண்டிகை ஆகிய இரண்டுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிரமம் என்று காவல் துறையினர் கூறியதைத் தொடர்ந்து ஏப்ரல் 17 அன்று நடக்கவிருந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 16 அன்றே நடைபெறுகிறது.
ஏற்கெனவே, ஏப்ரல் 16 அன்று நடக்கவிருந்த தில்லி - குஜராத் ஆட்டம் ஏப்ரல் 17 அன்று அஹமதாபாதில் நடைபெறவுள்ளது.