இதுவே என் கடைசி ஐசிசி போட்டியாக இருக்கலாம்: மனம் திறந்த தென்னாப்பிரிக்க வீரர்!

இதுவே என் கடைசி ஐசிசி போட்டியாக இருக்கலாம்: மனம் திறந்த தென்னாப்பிரிக்க வீரர்!

"சொந்த நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது தான் எப்போதும் என்னுடைய இலக்காகவே இருந்துள்ளது."
Published on

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியே தனது கடைசி ஐசிசி போட்டியாக இருக்கும் என தென்னாப்பிரிக்க பேட்டர் ரசி வான்டர் டுசன் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னணி பேட்டர் ரசி வான்டர் டுசன். இந்த மாத தொடக்கத்தில் இவர் 36 வயதைப் பூர்த்தி செய்தார். இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தற்போது பெருமளவில் விளையாடி வருகிறார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்கு முன்பு கராச்சியில் பேசிய அவர், இதுவே தனது கடைசி ஐசிசி போட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 2027 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், ரசி வான்டர் டுசன் ஓய்வு குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

"நிச்சயமாக, இதுவே எனது கடைசி ஐசிசி போட்டியாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

நான் எந்த முன்கூட்டிய யோசனைகளுடனும் நான் நேரத்தை அழைப்பேன், அல்லது நிர்வாகம் எனது வாழ்க்கையில் நேரத்தை அழைப்பேன் என்று நான் கூறவில்லை. நான் முன்கூட்டியே எதையும் சிந்தித்துவிட்டு கூறவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நேரம் வரும்போது நானே முடிவுக்குக் கொண்டு வருவேன். அல்லது சரியான நேரத்தில் அணி நிர்வாகம் முடிவுக்குக் கொண்டு வரும். அது தான் நிதர்சனம்.

தென்னாப்பிரிக்காவுக்காக விளையாட வேண்டும் என்பது தான் எப்போதும் என்னுடைய இலக்காக இருந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிறகு, லீக் போட்டிகளில் விளையாடுவீர்களா? என்று கேட்பார்கள். எனக்குத் தெரியாது.

தென்னாப்பிரிக்காவுக்காக விளையாட முடியாது என்பது தெரிந்தவுடன், லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் இருக்குமா என்று தெரியாது. சொந்த நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது தான் எப்போதும் என்னுடைய இலக்காகவே இருந்துள்ளது. இது முடிவுக்கு வந்தவுடன் நான் என்ன செய்வேன் என்பது எனக்குத் தெரியாது. ஏதேனும் வாய்ப்பு வந்தால், நிச்சயமாக அதை ஏற்றுக்கொண்டு தற்காலத்துக்கு அதற்காக உறுதியுடன் இருப்பேன்.

நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வருகிறார்கள். சிறப்பாக விளையாடுகிறார்கள். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருக்கிறார். டோனி டி ஸார்ஸி இருக்கிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ பிரீட்ஸ்கி இருக்கிறார். அவர் 150 ரன்கள் விளாசினார். ரியன் ரிக்கெல்டன் தற்போது தான் தொடங்கியுள்ளார். நிறைய நல்ல வீரர்கள் உள்ளார்கள்.

நான் நன்றாக விளையாடாவிட்டாலும், என் இடத்தை யாரும் நிரப்பப்போவதில்லை என்று கண்களை மூடிக்கொண்டு இருப்பவன் அல்ல நான். ஆரோக்கியமான சூழலில் இருப்பதால் மட்டுமே எனக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன்" என்றார் ரசி வான்டர் டுசன்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், தென்னாப்பிரிக்கா நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.

logo
Kizhakku News
kizhakkunews.in