
ஆர்சிபி அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகள் பெற்றுள்ள அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளன.
இந்த வருடம் மிகச்சிறப்பாக விளையாடி வரும் ஆர்சிபி அணி, பிளேஆஃப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளதா என்றால் இருவிதமாகப் பதில் கூறலாம்.
இன்று வரை சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என மூன்று அணிகள் மட்டுமே பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன. எனவே பிளேஆஃப் போட்டியில் இன்னும் 7 அணிகள் உள்ளதால் நாளுக்கு நாள் பிளேஆஃப் செல்வதற்கான தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, 18 புள்ளிகளை ஓர் அணி பெற்றிருந்தாலும் பிளேஆஃப் உறுதியில்லை என்பதுதான் நிஜம். இதனால் ஆர்சிபி அணி இன்னும் ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்று 18 புள்ளிகளைப் பெற்றாலும் அது மட்டுமே பிளேஆஃப் செல்லப் போதுமானதாக இருக்காது. 5 அணிகள் 18 புள்ளிகளைப் பெறுவதற்கான சூழலும் உருவாகலாம். அப்படி அமைந்துவிட்டால் நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபியால் பிளேஆஃப்புக்குச் செல்ல முடியாமல் போகலாம். எனவே ஒரு வெற்றி மட்டுமே போதாது, இரு வெற்றிகளைப் பெற்று 20 புள்ளிகளை எடுத்துவிட்டால் நிம்மதியாக ஐபிஎல் கோப்பையை முதல்முதலாகக் கைப்பற்றும் கனவைக் காணலாம்.
அதேசமயம் தற்போதுள்ள 16 புள்ளிகளைக் கொண்டும் ஆர்சிபி அணி பிளேஆஃப்புக்குச் செல்லலாம். இவை எல்லாமே மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்துதான் அமையவுள்ளது.
மேலும் மும்பையும் குஜராத்தும் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி வெற்றிகளைக் குவித்து வருவதால், முதல் இரு இடங்களுக்கான போட்டியில் இந்த இரு அணிகளும் ஆர்சிபிக்குக் கடும் நெருக்கடியை உருவாக்கும் எனத் தெரிகிறது.
எனவே அடுத்த இரு வாரங்களும் ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது.