ஐபிஎல் ஆட்டங்கள் முழுவதும் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 போட்டிக்கான முதற்கட்ட அட்டவணை பிப். 22-ல் வெளியிடப்பட்டது. மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான முதற்கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் மீதி அட்டவணை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல்-லின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தகவல் வெளியானது.
இது குறித்து கிரிக்பஸ்ஸுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அளித்த பேட்டியில், “ஐபிஎல் ஆட்டங்கள் முழுவதும் இந்தியாவில் தான் நடைபெறும், வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை” என்றார்.
ஐபிஎல் போட்டியின் மீதி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.