
ஐபிஎல் போட்டியில் 94 ஆட்டங்களை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் இருந்தபோது, எல்லா அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடும். மற்ற அணிகளுடன் தலா இரு ஆட்டங்களில் விளையாடுவதன் மூலம் ஓர் ஆட்டம் உள்ளூர் ஆட்டமாகவும் மற்றொரு ஆட்டம் வெளியூர் ஆட்டமாகவும் இருந்தது. கடந்த 2022 முதல் 10 அணிகள் பங்கேற்கும் போட்டியாக ஐபிஎல் மாறிய பிறகு, அணிகள் மொத்தம் விளையாடும் எண்ணிக்கையான 14-ல் மாற்றம் இல்லை. இதனால், ஒரு சில அணிகளுடன் ஓர் ஆட்டத்தில் மட்டுமே விளையாட வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போது மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதை மனதில் கொண்டு எல்லா அணிகளும் தலா இருமுறை மோதும் அளவுக்கு 94 ஆட்டங்களுடன் போட்டியை நீட்டிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறியதாவது:
"இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் மற்றும் ஐசிசி போட்டிகள் மீதான ரசிகர்களின் விருப்பம் மாறி வருவதைப் பார்க்கும்போது 94 ஆட்டங்கள் கொண்ட போட்டியாக ஐபிஎல்லை மாற்றுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. டி20 கிரிக்கெட், டி20 லீக் கிரிக்கெட் மீதான ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதால், இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படும்.
பெரியளவில் காலம் தேவைப்படும் அது 74 நாள்களிலிருந்து ஒரு கட்டத்தில் 84 நாள்கள் அல்லது 94 நாள்கள் வரை செல்லலாம். இதன்மூலம், எல்லா அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அட்டவனை தயார் செய்யப்படலாம். இதற்கு 94 ஆட்டங்கள் தேவை.
ஐபிஎல் 2025-ல் 84 ஆட்டங்களாக அதிகரிக்கப்படலாம் எனப் பேச்சுகள் இருந்தன. ஆனால், அட்டவணை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், நடைமுறைப்படுத்த முடியவில்லை" என்றார் அருண் துமால்.
2028-க்கு பிறகு ஐபிஎல் போட்டியை 94 ஆட்டங்களைக் கொண்ட போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிடும் எனத் தெரிகிறது.