
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐபிஎல் 2025 தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டன.
இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த கடந்த இரு நாள்களாக முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் இந்தியப் படைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் மட்டும் அப்பாவி மக்கள் 16 பேர் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை நேற்று ஒரு படி உயர்ந்து இந்திய எல்லை மாநிலங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இவை அனைத்தையும் இந்தியப் படைகள் தகர்த்தெறிந்தன. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலால் இந்தியாவுக்கு உயிர்ச் சேதம் உள்பட எந்தச் சேதமும் இல்லை என இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பதன்கோட் விமானப் படைத் தளம் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தப் பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 ஒத்திவைக்கப்படலாம் என்ற பேச்சுகள் நேற்று எழுந்தன.
இந்நிலையில், ஐபிஎல் 2025-ஐ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.