கில், பந்த் கலக்கல்: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் முனைப்பில் இந்தியா!

2-வது நாளின் உணவு இடைவேளையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.
கில், பந்த் கலக்கல்: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் முனைப்பில் இந்தியா!
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் மும்பையில் நேற்று (நவ.1) தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக சிராஜ் இடம்பெற்றார்.

ஆரம்பம் முதல் திணறிய நியூசிலாந்து அணியை, வில் யங் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர்.

இதன் பிறகு ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி.

டேரில் மிட்செல் 82 , வில் யங் 71 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், கடந்த டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னின்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து 149 ரன்கள் பின்தங்கியிருந்தது.

ஆட்டமிழக்காமல் கில் 31 ரன்களும், ரிஷப் பந்த் ஒரு ரன்னும் எடுத்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

கில் மற்றும் ரிஷப் பந்த் கூட்டணி அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்தனர். இருவரும் அரைசதம் அடிக்க இந்த கூட்டணி 96 ரன்கள் சேர்த்தது.

ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து இஷ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கில் 70 ரன்கள் எடுத்து பொறுமையாக விளையாடி வருகிறார்.

2-வது நாளின் உணவு இடைவேளையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in