இந்தியா - நியூசிலாந்து இடையே புனேவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24 அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களும் கில் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடியது. 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டாம் பிளென்டலும், கிளென் பிலிப்ஸும் கூட்டணி அமைத்து தொடர்ந்து நியூசிலாந்து ஸ்கோரை உயர்த்தினர்.
பிளென்டல் 41 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழக்க, சான்ட்னர் 4 ரன்களிலும், சௌதி ரன் எதுவும் எடுக்காமலும் அஜாஸ் படேல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார். முன்னதாக, கேப்டன் லேதம் 86 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இதன் மூலம் இந்திய அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 300 ரன்களுக்கு மேல் கொண்ட இலக்கை இந்திய அணி ஒரே ஒரு முறை எட்டியுள்ளது.