3-வது டெஸ்ட்: நியூசிலாந்திடம் மீண்டும் தடுமாறும் இந்தியா!

முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
3-வது டெஸ்ட்: நியூசிலாந்திடம் மீண்டும் தடுமாறும் இந்தியா!
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி, பேட்டிங்கில் சொதப்பி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக சிராஜ் இடம்பெற்றார்.

ஆரம்பம் முதல் திணறிய நியூசிலாந்து அணியை, வில் யங் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர்.

இதன் பிறகு ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி.

டேரில் மிட்செல் 82 , வில் யங் 71 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், கடந்த டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 18 ரன்கள் எடுத்து வெளியேற, ஜெயிஸ்வால் - கில் கூட்டணி 53 ரன்கள் சேர்த்தது.

ஆட்டம் நிறைவடைய சிறிது நேரம் மட்டுமே இருந்த நிலையில் ஜெயிஸ்வால் 30 ரன்களிலும், சிராஜ் ரன் எதுவும் எடுக்கமாலும், கோலி 4 ரன்களிலும் வெளியேறினர்.

தவறான ஷாட்டை விளையாடிய ஜெயிஸ்வால், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய சிராஜ், தேவையில்லாமல் ரன் அவுட் ஆன கோலி என 9 பந்துகளில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து 149 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஆட்டமிழக்காமல் கில் 31 ரன்களும், ரிஷப் பந்த் ஒரு ரன்னும் எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in