
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமாக மேட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. சிராஜ், கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.
ஆரம்பம் முதல் நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடியது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் 7 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து பந்துவீசினர்.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப உடனடியாக பலன் கிடைத்தது. அஸ்வினின் முதல் ஓவரில் லேதம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு கான்வே சிறப்பாக விளையாடினார். அவருடன் கூட்டணி அமைத்த வில் யங் 18 ரன்களில் அஸ்வின் பந்தில் வெளியேறினார்.
முதல் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 47 ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 5 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.